Thursday, October 14, 2010

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்

நடிகரும், அதிமுக முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான எஸ்.எஸ்.சந்திரன் மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் நேற்று அதிமுக சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு பேசினார் எஸ்.எஸ்.சந்திரன். கூட்டத்தை முடித்த பின்னர் நள்ளிரவில் மன்னார்குடி வந்த எஸ்.எஸ்.சந்திரன் அங்குள்ள பூர்ணா என்ற தனியார் ஹோட்டலில் தங்கினார். இந்த நிலையில் அவருக்கு மாத்திரை கொடுப்பதற்காக அவரது உதவியாளர் ஒரு மணியளவில் சந்திரனை எழுப்பினார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடலிலும் அசைவு எதுவும் இல்லை. இதனால் பயந்து போன அவர் கட்சி நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்திரனைப் பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் அதிமுகவினர் பெரும் சோகமடைந்தனர். உடனடியாக சந்திரனின் உடலை அவரது காரிலேயே சென்னைக்குக் கொண்டு வந்தனர். திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளர் காமராஜ் உள்ளிட்ட அதிமுகவினரும் உடன் வந்தனர். சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட சந்திரனின் உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். சந்திரனின் உடலுக்கு அதிமுகவினரும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment