Saturday, October 30, 2010

இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை சமுதாய நோக்கு

இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை சமுதாய நோக்கு

Ikkala ulagirku Thirukuralin thevai samuthaya nokku - Tamil Literature Ilakkiyam Papers ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஈரடி வெண்பாக்களால், 1330 அரும்பாக்களைப் புனைந்து, அவற்றை முப்பாலாகத் தொகுத்து வள்ளுவப் பெருந்தகை வழங்கிச் சென்றுள்ள அட்சய பாத்திரம் "திருக்குறள்" எனும் கருத்துப் புதையல். அது மொழி, மதம், இனம், நாடு என அனைத்தும் கடந்து "எல்லை தாண்டிய தமிழ் இலக்கிய உலகப் பொது மறை" ஆகும். எந்நோக்கில் இருந்து பார்த்தாலும் அந்நோக்கத்திற்குத் தகுந்த போக்கையும், எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அக்கேள்விக்குத் தகுந்த பதிலையும், எந்தச் சிக்கலைக் கூறினாலும் அச் சிக்கலுக்குத் தகுந்த தீர்வையும் தரவல்ல "அமுத சுரபி" திருக்குறள் ஆகும்.
முக்காலமும் உணர்ந்த மாமுனியான திருவள்ளுவர் இயற்றிய குறள், காலத்தை வென்ற காவியம். எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய மறைபொருளின் "சமுதாய நோக்கு" பற்றி, இங்குக் காண்போம்.
தசாவதாரத்தில் ஓர் அவதாரமாக வாமன அவதாரம் எடுத்த திருமால், தம் ஈரடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து மூன்றாவது அடியால் மகாபலியின் சிரத்தை அழுத்திச் செருக்கை அகற்றினார். பொய்யாமொழிப் புலவரான வள்ளுவரோ தம் ஒன்றேமுக்கால் அடிக்குறளால் மூவுலகையும் முக்காலமும் ஆள்கிறார் என்பதே சத்திய வாக்கு ஆகும்.
புலால் உண்ணுதலையும், உயிர்ப்பலி இடுதலையும், கள் உண்பதையும் சங்ககாலச் சான்றோர்கள் கூட கடிந்துரைக்கவில்லை. நவநாகரிகம் வளர்ந்துவிட்ட இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழும் மக்கள் கூடப் புலால் உண்பதையும் உயிர்ப்பலி கொடுப்பதையும் மது அருந்துவதையும் தவறாக நினைத்து ஒதுக்குவதில்லை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "கொல்லாமை" மற்றும் "கள்ளுண்ணாமை" போன்ற அரிய அத்தியாவசிய சமுதாயக் கோட்பாடுகளை உலகிற்கு வற்புறுத்திய முதல் தெய்வப் புலவர் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வரான திருவள்ளுவரே ஆவார். பிற்காலப் புலவர்கள் மட்டுமல்லாது தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் வள்ளுவரின் சமுதாய நோக்கை மிகவும் வியந்து பாராட்டுகின்றன.
வள்ளுவர் நோக்கில் "கொல்லாமை"ச் சமுதாயம்
இந்த உலகச் சமுதாயம் அன்பை அடிப்படையாய்க் கொண்டது. சாதாரண ஈ, எறும்பு கூட இயற்கையின் படைப்பே. எனவே, மனித சமுதாயத்தைப் போலவே அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமை உண்டு. பிற உயிரினங்களுக்கு ஊறு விளைவிப்பது கூடாது எனப் புரட்சிக் குரல் கொடுக்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
"ஊன் உண்டு உடல் வளர்த்தேனோ...?! என்ன பாவம் செய்தேனோ....?! என்று வள்ளலார் சுவாமிகள் கலங்கிக் கண்ணீர் வடித்துள்ளார்.
உயிர்க்கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள்
உறவினத்தார் அல்லர்; அவர் புற இனத்தார்.....
(திருவருட்பா - 4160 - 6 - 57- அருள் விளக்கமாலை - 71)
என்று வள்ளுவர் காட்டிய வழியில் உயிர்க் கொலையையும் புலால் புசிப்பதையும் வெறுப்பதோடு, அதைச் செய்வோர் உறவினரே ஆனாலும் அவர்கள் புற இனத்தாரே ஆவர் எனப் புறந்தள்ளுகிறார் வள்ளலார். அத்தோடு முதலாம் நூற்றாண்டில் வாராது வந்த மாமணியாக வந்த அவதாரச் சித்த புருடர் - திருவள்ளுவர் என்கிறது திருவருட்பா. இவ்வாறாக, அன்பையும் அகிம்சையையும், சீவ காருண்யத்தையும் ஆணிவேராகக் கொண்டு வலுப்பெற்றது நமது மனித சமுதாயம் ஆகும். இதையே வள்ளுவரும் தம் பொதுமறையில், அறத்துப்பால் துறவறவியல் - "கொல்லாமை" மற்றும் "புலால் உண்ணாமை" எனும் அதிகாரங்களில் 20 முத்தான குறட்பாக்களில் வலியுறுத்துகிறார்.
அன்னியக் கலாச்சாரப் படையெடுப்புக் காரணமாக, நமது சமுதாய மக்கள் தங்களின் சீவகாருண்யத்தை மறந்து வருகின்றனர். மனித சமுதாயம் இயற்கையால் தனக்கு அளிக்கப்பட்ட பகுத்தறிவை மறந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல் பிற உயிர்களைப் பலியிட்டுக் கொன்று தின்று வருகிறது. இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்ற தவறான கண்ணோட்டத்தில் ஊறிப்போன மானிட சமுதாயம் பிற பிராணிகளை வதைத்து உண்ணவும் ஆரம்பித்தது.
பிராயச்சித்தமே இல்லாத மகாபாதக பாவச் செயல், பிற உயிர்களைக் கொல்வது ஆகும். உயிர்க் கொலை புரிவோரைப் "புலையர்" என இகழ்கிறார் திருவள்ளுவர். இதையே,
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து
- - - (குறள் 329)
என்று சமுதாய நோக்கில் குரல் கொடுக்கிறார். பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவித்துக் கொல்லும் தன் கொடிய செயல்களுக்கு மனச்சாட்சி இடம் கொடுக்காததால், மனிதன் தான்செய்யும் பிராணிக் கொலைகளை இறைவனுக்காகவே செய்வதாகக் கூறித் தனது பாவத்திற்கு நியாயம் கற்பிக்க முயல்கிறான். இவ்வாறாக, ஒரு சில மனிதர்களின் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டதே திருக்கோயில்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் உயிர்ப் பலி கொடுக்கும் வழக்கம் ஆகும்.
ஓர் உயிரைப் பலியிட்டுச் சாந்தி முதலியன செய்வதால் எது கிட்டினும், மேன்மையுள்ளோர் உயிர்ப் பலியிடும் பாவத்தைச் செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். இதையே,
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை
- - - (குறள் 328)
என்று சுட்டிக் காட்டுகிறார் வள்ளுவர்.
கோயில் என்பது இறைவனின் உறைவிடம் ஆகும். அது மிகவும் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். அதனுள் பறவைகளையும் பிராணிகளையும் பலியிட்டுக் கோயிலினுள்ளேயே சமைத்து உண்பது கடுமையான துர்நாற்றத்தை விளைவிப்பதுடன் அதன் தூய்மையும் கெட்டுவிடுகிறது. மொகலாயர்கள், அவர்களைத் தொடர்ந்து வெள்ளையர்களும் நம் நாட்டை வசப்படுத்திக் கொண்டபோது, மானிடப் பண்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவை அடியோடு அழிந்து போய் விட்டன. அதனால் காலங்காலமாகக் "கொல்லாமை"யைக் கடைப்பிடித்து வந்த மக்கள், அசைவ உணவிற்கு மாறினர். ஆயினும் பல தலைமுறைகளாக அண்ணல் காந்தி வகுத்துத் தந்த அகிம்சா தர்மத்தையே பலரும் கடைப்பிடித்து வந்ததால், தங்கள் சுவைக்காகப் பிற உயிர்களைக் கொன்றபோது அவர்களது மனச்சாட்சி அவர்களைக் கடுமையாக உறுத்தி வந்தது. அதனைச் சமாளிப்பதற்காகத் தெய்வத்திற்காகவே உயிர்ப்பலி இடுவதாகக் கூறிய மனிதனுக்கு மோசமான நவ நாகரீக கலாச்சாரமும் கைகொடுத்தது.
ஆயிரம் வேள்விகளால் கிட்டும் மேன்மையை விட, புலால் உண்ணாமல் இருப்பதே மிகப் பெரிய புண்ணியம் என்கிறார் வள்ளுவர்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
- - - (குறள் 259)
எனவே, ஒரு சமுதாயம் சிறப்பான வகையில் பண்பாட்டோடு முன்னேற வேண்டுமானால், கொல்லாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். "புலால் உண்ணும் ஆசையினால்தான் கோயில்களில் உயிர்ப்பலி நடக்கிறது" என்பதை உணர்த்தும் வகையில்,
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
- - - (குறள் 251)
என்று சாடுகிறார். மேலும்,
உயிர்ப்பலி இடாதவனையும் புலால் உண்ணாதவனையும்
அனைத்து உயிர்களும் போற்றி வணங்கும்
என்ற பொருள்படும் வகையில்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
- - - (குறள் 260)
என்று சமுதாய நோக்கில் வழக்காடுகிறார் வள்ளுவர்!
பாவம் செய்வதா சமுதாய உரிமை!
"உயிர்ப்பலி இட அனைத்துச் சமுதாயத்தினருக்கும் உரிமை உண்டு. தங்களுக்குப்பிடித்தமான பிராணிகளை காணிக்கையாக்கி வழிபட்டுக் கொன்று தின்பது தமிழனின் தொன்று தொட்ட நாகரீகக் கலாச்சாரம்....!" என்று சிலர் அறிந்தோ அறியாமலோ பேசி வருவது, சமுதாயத்தைச் சீரழிக்கவே செய்யும். அன்பையே உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு, மேற்கண்ட சொற்கள் கீழ்ச் சொற்கள் ஆகும்.
பண்பாட்டின் சின்னம் - "கொல்லாமை"
மதம், இனம், மொழி, காலங்களுக்கு அப்பாற்பட்டது கொல்லாமை எனும் சீவகாருண்யம் ஆகும். ஓர் இந்துவோ, கிறிஸ்தவரோ, முஸ்லீமோ எவர் உயிர்ப்பலி இடுவதற்காக ஒரு பறவையையோ விலங்கையோ வெட்டினாலும் அந்த உயிரினம் துடிதுடித்துத்தான் உயிரை விடுகிறது. இவ்விதம் உயிர் பிரிவதற்கு முன்பு, அந்த உயிரினம் துடிதுடித்து, அது படும் கொடிய வேதனையை வார்த்தைகளால் வடிக்க இயலாது.
பறவைகளும் பிராணிகளும் பலியிடப்படுவதால், நமது சந்ததிகள் பல தலைமுறைகளுக்குப் பாதிக்கப்படுகின்றன. சிறுகுழந்தைகள் புற்று நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளால் இறப்பதற்கு முற்பிறப்பு உயிர்வதைப் பாவங்களே காரணம் என்கிறது ஆன்மீகம். இதையே வள்ளுவரும் உறுதிப்படுத்துகிறார்.
உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
- - - (குறள் 330)
என்று செப்புகிறார் வள்ளுவர்.
அறிவியல் பூர்வமான குறள்
வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில், உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் நூற்றுக்கு எண்பது சதவிகிதம் பேர் புலால் உண்பவர்களாகவே இருக்கிறார்கள்" என்று கூறுகிறது. ஆகையால், புலால் உண்ணுதல் மற்றும் உயிர்ப் பலியிடுதலால் இம்மையிலும் தீராத நோய் - மறுமையிலும் தீராத நோய்.
குறள் காட்டும் வழியில் தமிழகம்
உயிர் வதையைத் தமிழக அரசு தடை செய்துள்ள விதம், குறள்காட்டும் வழியில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் இட்டுச் செல்வதோடு, ஏராளமான மக்களை "உயிர்வதை" எனும் பாவத்தில் இருந்து தடுக்கும் சட்டம் ஆகும். இதனால் ஓர் ஆடு அல்லது கோழி உயிர்ப் பிச்சை பெற்றால் கூட அது மகத்தான புண்ணியம் ஆகும்.
சமுதாய விழிப்புணர்ச்சியில் வள்ளுவம்
"துறவறத்தின் மேன்மையைப் போற்றும் வள்ளுவர், "துறவித் தோல்" போர்த்திய போலிச் சாமியார்களைச் சாடுவதிலும் சமுதாய நோக்கினைக் கடைப்பிடிக்கிறார். தேசத்திற்கும், சமுதாயத்திற்கும் மிகப் பெரிய சாபக்கேடு இத்தகைய "போலிச்சாமியர்கள்" என்பதை,
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்
- - - (குறள் 276)
என்று உணர்த்துகிறார். சமுதாய விழிப்புணர்ச்சிக்கு வள்ளுவம் போன்ற அருமருந்து வேறு உண்டோ!
சமத்துவச் சமுதாயம் உணர்த்தும் வள்ளுவம்
உயிரினங்களில் எந்த ஏற்ற தாழ்வும் கிடையாது; சாதி, மதம், இனம், மொழிப் பாகுபாடுகள் அற்ற மானிட சமுதாயமே மகத்தான சமுதாயம் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார் வள்ளுவர். இந்த உண்மையை வலியுறுத்தும் வகையில்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
- - - (குறள் 972)
என்று உணர்த்துகிறார்.
சமுதாய நோக்கில் கள்ளுண்ணாமை
தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என அனைவராலும் போதைத் திரவியமாய், மது - சோமபானம், சுராபானம், கள்.. எனப் பற்பல பெயர்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குடியை விட்டொழிக்க ஓர் அதிகாரத்தை ஒதுக்கியவர் வள்ளுவர், காலத்தை எல்லாம் கடந்த மிகப் பழமையான நம் புராதன நூல்களில், 5 வகைத் தவறுகள் - மகாபாதகங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உயிர் வதை மற்றும் மது உண்பது ஆகிய இரண்டும் மிகக் கொடிய மகாபாதகங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இத்தகைய பாவச் செயல்களைச் செய்யாமல் இருந்தாலே சமுதாயம் முன்னேறும் என்பது வள்ளுவர் வாக்கு. ஏழை எளிய மக்களின் வாழ்வையே நாசமாக்கி விடும் இத்தகைய குடிப்பழக்கம் மக்களால் அறவே ஒதுக்கப்பட வேண்டும். அரசாங்கமும் உயிர்ப்பலியை வள்ளுவர் வாக்கின் அடிப்படையில் தடை செய்தது போல மதுவிற்கும் தடை விதித்துப் பொய்யாமொழிப் புலவரின் வாக்கை மெய்ப்பிக்க வேண்டும்.
மது உண்ணும் மயக்கத்தால் உறவுமுறைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. மது உள் புகுந்ததும் அறிவு வெளியேறி, தாரத்திற்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பெற்ற மகளையே பலவந்தப்படுத்திய மகாபாதகர்கள், சமுதாயத்தையே நிர்மூலம் ஆக்குகிறார்கள். அது மட்டுமின்றி, சம்பாதிக்கும் பொருள் முழுவதும் மதுவிலேயே மூழ்கிப் போக, குடும்பம் வறுமையினால் சின்னாபின்னம் ஆகிறது.
மிகக் கொடிய கொலைகளைச் செய்தவனை மகனாக ஈன்றெடுத்த தாய், அந்த நிலையிலும் தன் மகனை விட்டுக் கொடுக்காமல் பாசத்தின் காரணமாக மருகுவாள். ஆனால், தன் மகன் "குடிகாரன்" என்பதை ஒரு தாய் உணர்ந்தால் அவனை அடியோடு வெறுத்து ஒதுக்கி விடுவாள். தெய்வத்தின் உண்மைச் சொரூபமான தாயாலேயே ஒதுக்கப்பட்ட குடி மக்களால் ஒரு சமுதாயம் எப்படி மேம்பட முடியும்?
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
- - - (குறள் 923)
என்று சாடுகிறார்.
ஒரு சமுதாயம் மேம்பட வேண்டுமானால், வள்ளுவர் காட்டிய வழியில் மதுவைத் தடை செய்யவேண்டும். ஏனெனில் ருசி கண்ட பூனையைத் திருத்த முடியாது போல, கள்ளுண்ட குடி மக்களை, அதன்பிடியில் இருந்து மீட்பது மிகக் கடினம். எனவே, "குடி"க்கு இடம் கொடுக்காமல் அரசாங்கமே வள்ளுவர் வழியில் மது விலக்கைக் கடுமையாக அமுல் செய்தால் சமுதாயம் நிச்சயம் மேம்படும். இதே கருத்தின் அடிப்படையில்,
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று
- - - (குறள் 929)
என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர்,
குறள் வழியில் சூழ ஒழித்த தமிழகம்
பற்பல துன்பங்களை அள்ளித்தந்து மிகக் கொடிய வறுமையில் தள்ளும் சூதாட்டத்தை வேரறுக்க வேண்டும் என்கிற பொருளில், சமுதாய நோக்கில்,
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்
- - - (குறள் 934)
என்று பொருளாதார மேம்பாட்டிற்கு வழி கூறுகிறார் வள்ளுவர்.
நம் தமிழகமும் சூதொழிந்த தமிழகமாக வள்ளுவர் செப்பிய பொய்யா மொழியைச் சமுதாய முன்னேற்றம் மூலம் மெய்ப்பித்துள்ளது.
பண்பாடு போற்றும் வள்ளுவ சமுதாயம்
ஒரு சமுதாயம் ஆக்கப்பூர்வமான முறையில் செழித்தோங்க வேண்டுமெனில், அந்தச் சமுதாயம் "பண்பாட்டின் தொட்டில்" போல் விளங்கவேண்டும் என்பதைப் பசுமரத்தாணி போல் உணர்த்துகிறார் வள்ளுவர். பெண் உரிமை காக்கும் வள்ளுவர் பண்பு - கற்பு போன்றவை பெண்களுக்கும் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பொருந்தும் என்பதை வலியுறுத்துகிறார். சமுதாயத்தில் பண்பாடு காக்கப் பட வேண்டுமெனில் ஆண் - பெண் பண்பு நலன் மட்டுமல்லாது அன்பும் இருபக்கமும் இழைந்தோட வேண்டும். குடும்பத்தில் ஒருவர் அன்பு, பாசத்துடன் விளங்க, மற்றொருவரோ பாராமுகமாக இருந்தால் அன்பு மட்டுமல்லாது பண்பும் தடம் புரண்டு விடும். எனவே அன்பும் பண்பும் கலந்து ஓங்கும் இல்லற சமுதாயத்தை வடிவமைக்கும் வகையில்,
ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலை யானும் இனிது
- - - (குறள் 1196)
என்று போதிக்கிறது குறள்.
முப்பாலில் தோய்ந்த சமுதாய நோக்கு
ஆக, "இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை" என்ற அடிப்படையில் நோக்கினால் அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் என முப்பாலிலும் கலந்த தேவாமிர்தமாகச் "சமுதாய நோக்கு" மிளிர்கிறது. வள்ளுவரின் எண்ணம், சொல், செயல், அனைத்திலுமே சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற உந்துதல் தணியாத தாகமாக, நீறு பூத்த நெருப்பாகக் கழன்றுகொண்டே இருப்பதை, அவரது பற்பல அதிகார அகராதிகள் எடுத்துரைக்கின்றன.
ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால், மேற்கண்ட மகா பாதகங்களைக் களைவதோடு, மக்கள் சமுதாயத்தைக் கட்டிக் காக்க, ஆட்சியாளர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறை (அதிகாரம் : அமைச்சு), உழவுத் தொழிலின் மேன்மை (அதிகாரம் : உழவு), மக்களிடையே சுய கட்டுப் பாட்டை அறிவுறுத்துதல் (அதிகாரம் : ஒழுக்கமுடைமை), கல்லாமையின் கொடுமை, கள்ளாமையின் மேன்மை, குடி செயல் வகையின் மேன்மை - எனப் பற்பல அதிகாரங்களின் மூலம் சமுதாய நோக்கை நோக்கித் தனது குறள் அதிகாரங்களைப் பரப்புகிறார் வள்ளுவர்.
நம் அன்றாட வாழ்விற்கு மூச்சு எப்படி அத்தியாவசியத் தேவையோ, அதே போல இக்கால உலகிற்குப் பொய்யாமொழியான திருக்குறள் நிச்சயம்தேவை. சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லக் குறள் காட்டும் வழியில் நிழலாக நாம் பின் தொடர்ந்தால் நம் நிழலும் நம்மை மதிக்கும்.

No comments:

Post a Comment