Saturday, October 30, 2010

கணிப்பா? திணிப்பா?

கணிப்பா? திணிப்பா?
தேர்தல்களை ஒழுங்காகவும் முறையாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதில் தேர்தல் ஆணையம் பல அம்சங்களிலும் முழு முனைப்புக் காட்டி வருவது உண்மையே. இது பெருமைக்குரியதும்கூட. ஆயினும் இத்தேர்தல்கள் சமதளத்திலோ, சமத்துவ வசதி வாய்ப்புகளுடனோ நடைபெறுவதாகக் கருதுவதற்கில்லை. ஏனெனில் தேர்தலில் போட்டியிட ஏராளமான நிதி வசதி தேவை. பெரிய பணக்காரர்கள் சொந்தப் பணத்தைச் செலவிடலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றுவதற்கான தகுதிகளும் ஆற்றலும் உடையவர்கள் எல்லோரும் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பில்லை. ஏனெனில் தேர்தல் செலவுக்கான பணத்திற்கு எங்கே போவது?
இது ஒரு புறமிருக்க, தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரால் இத்துறையில் தேர்ச்சி பெற்ற நிறுவனங்கள் சில நவீன உத்திகளைப் பயன்படுத்தி ஒத்திகை நடத்தி, புள்ளிவிவரங்களைச் சேகரித்து அந்த அடிப்படையில் மதிப்பீடுகளை வெளியிடுகின்றன. அண்மைக்காலத்தில் இத்தகைய கருத்துக் கணிப்புகள் புதிய மவுசைப் பெற்றுவிட்டன. இவை நூற்றுக்கு நூறு சரியானவை என்று கூறுவதற்கில்லை. கடந்த ஆண்டு இறுதியில் வடமாநிலங்கள் நான்கில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெளியான கருத்துக் கணிப்புகளை - இறுதியில் தேர்தல் முடிவுகள் பொய்ப்பித்துவிட்டன.
ஆயினும் இத்தகைய கருத்துக் கணிப்புமுறை - மக்களுடைய நினைவோட்டத்தைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய கருத்தோட்டத்தைத் திரிப்பதற்கே பயன்படுகின்றன என்று எழுப்பப்படுகின்ற புகாரை வழித்து எறிந்துவிடுவதற்கில்லை. அதோடு ஏராளமான பணச்செலவில் நடத்தப்படுகின்ற இக்கணிப்புகள் பெரிய கட்சிகளைப் பெரிதும் பாதிக்கக் கூடியன. சிறிய கட்சிகளை இருட்டில் தள்ளிவிடக் கூடியவை. பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் கூறியிருப்பதைப்போல இத்தகைய கணிப்பு - மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பதல்ல; ஒரு குறிப்பிட்ட கட்சிக்குச் சாதகமாகக் கருத்தோட்டத்தை உருவாக்கக் கூடியது என்ற விளக்கமும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கருத்துக் கணிப்புகள் இருதடவை நடத்தப்படுகின்றன. வாக்குப் பதிவுக்கு முன் நடத்தப்படுவது கருத்துக் கணிப்பு. வாக்குப் பதிவுக்குப் பிறகு - வெற்றி தோல்வி எத்தரப்புக்கு என்பது குறித்து நடைபெறுவது - வாக்குக் கணிப்பு. மக்களவைத் தேர்தல்கள் ஐந்து கட்டங்களில் நடைபெற இருக்கின்றன. அப்படியிருக்க, கருத்துக் கணிப்பு - வாக்குக் கணிப்பு ஆகிய இரண்டுமே பிந்திய கட்டத் தேர்தல்களைப் பாதிக்கக்கூடுமல்லவா! எனவே தேர்தல் ஆணையம் முன்னின்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த இருவகையான கணிப்புகள் குறித்தும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கடைசிக்கட்டத் தேர்தல்கள் முடிவதுவரையில் கருத்துக் கணிப்பு - வாக்குக் கணிப்பு இரண்டுக்குமே தடை விதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரியுள்ளன. இதையொட்டி இவ்விருவிதக் கணிப்புகளைத் தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்குமாறு கோரி மத்திய அரசுக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த யோசனை குறித்து மத்திய சட்ட அமைச்சகம் பரிசிலித்து வருகிறது.
இந்நிலையில் கருத்துக் கணிப்புக்குத் தடை விதிப்பது, அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கிற பேச்சுரிமை - கருத்து வெளியிடும் உரிமைக்கு மாறுபட்டதல்லவா - என்ற சட்டநுட்ப சர்ச்சை எழுவதற்கு வாய்ப்புண்டு. இதில் 1999-ல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இத்தகைய சர்ச்சைக்குப் பலம் சேர்ப்பதும்கூட.
ஆயினும் - பொதுநலன்களுக்கு முன்னுரிமை அளித்து, அடிப்படை உரிமைகளின் விரிவமைப்புக்கு வரையறை செய்வது உண்டு. அதே நியதியைக் கருத்துக் கணிப்புப் பிரச்சினையிலும் அனுசரிப்பதில் தவறில்லை. ஏனெனில் யதார்த்த நிலவரங்களைக் கவனிக்கும்பொழுது, இருவகைக் கணிப்புகளுக்கும் தடை விதிப்பது நியாயமே. அதன்மூலம் தேர்தல் முறையில் நேர்மையும் சுதந்திரமும் காப்பாற்றப்படுகின்றன.

No comments:

Post a Comment