Saturday, October 30, 2010

இருண்ட வீடு

குடும்பத்தில் முதியோர் முதல் அனைவர்க்கும் தேவையான வசதிகள் வழங்கப்பெற்று, எல்லோரும் மகிழ்வுடன் திகழ்ந்தால், அக்குடும்பம் நிறைவு நிறைந்த குடும்பம்; நிம்மதி நிறைந்த வீடு எனக் கூறப்பெறுவதற்குரிய இலக்கணம் ஆகிறது.
முதியோர் முனகல்; குழந்தைகள் அரைப்பட்டினி; படிக்க வசதியின்றி வேலைக்குப் போகும் விபரீதம் இன்னபிற என்றால், அது சிறந்த குடும்பம் என்பதற்கில்லை. இருண்ட வீட்டுக்கு எடுத்துக்காட்டு.
இந்தக் கூட்டுக் குடும்ப இலக்கண, இலக்கியங்கள் நாட்டுக்கும் நன்கு பொருந்தும். வீட்டின் விரிவாக்கம் நாடு. தனிமனித அடித்தளம் மீதெழுந்த அடுக்குமாடிதானே, தேசம்?
நாட்டில் எல்லாம் இருந்தும், மக்கள் உயிர்க்கு மட்டும் பாதுகாப்பில்லை என்றால், அது நாடல்ல. பிணந்தின்னும் பிசாசு வாழ்வதாகப் புராணிக்கப்படும் சுடுகாடு அது.
"தினமணி" - மார்ச் 26 இதழில், "சிறுநீரகத்தை எடுக்க மாணவர் கடத்தல்: பெங்களூர்க்குச் சென்றபோது காரிலிருந்து தப்பினார்" என்ற செய்தி படித்தேன். சுதந்திர, மக்களாட்சி நாட்டில் வாழ்கின்றோமா அல்லது அறிவியல் முன்னேற்றம் அடைந்த, ஆனால் பண்புகளால் பழங்காலக் காட்டுமிராண்டிக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து அவதிப்படுகின்றோமா என்பதை அறிய இயலவில்லை.
தேர்வுக்குப் படிக்கச் சென்ற மாணவன் கடத்தப்பட்டிருக்கிறான். தப்பிக்க முயன்றதால், சூடு போடப்பட்டிருக்கிறான். சூடு போடப்பட்ட இடங்கள் தீக்கொப்பளங்களாக விளங்கிய பரிதாபக் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.
இக்கொடுஞ்செயலுக்குப் பலமான பின்னணி, கூட்டம் - கூட்டமாக இருக்கலாம். விடுதலை பெற்று அரை நூற்றாண்டுக்குப் பின்பும் விவரிக்க முடியாத விபரீதம்! அச்சமின்றிப் பகலில் கூட நடமாட முடியா அவல நிகழ்வு.
போதைப் பொருள் போன்றவை கடத்தப்படுவதைப் படிக்கிறோம். மனித உறுப்புக் கடத்தல்கள் அண்மைக்கால அரிய கண்டுபிடிப்பு. விஞ்ஞானத்தின் வியத்தகு சாதனைத் தொடர் நிகழ்வு!
இப்புனிதப் பணிக்கு உறுதுணை மருத்துவ, மாமனிதர்கள்! மருத்துவப் படிப்புக்குச் சேரும் முன்பு, "அறத்திற்கொவ்வாச் செயல் செய்ய மாட்டேன்" என்று உறுதி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இன்பம் நிறைந்திராத வீட்டை "இருண்ட வீடு" என்பதுபோல், துன்பம் தொடர்கதையான நாட்டை என்ன சொல்வது? ஒளிர்கிறது என்றால் உலகம் சிரிக்கும்.
பகலில் படிக்கப் போகிற மாணவனுக்கும் கூட பாதுகாப்பில்லை. வீடு திரும்பும் உத்தரவாதம் இல்லை. உலகில் மாபெரும் மக்களாட்சி நாடு என்று மார்தட்டப்படுகிறது.
"தன்நெஞ் சறிவது பொய்யற்க - பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்" - மனச்சாட்சி இருந்தால் உறுத்தும்.
சமுதாயக் குற்றக்கூட்டம், எய்ட்ஸ் போல் எங்கும் பரவி உள்ளது. எண்ணிக்கையில்தான் ஏற்றத்தாழ்வுகள்.
திரைப்படம், பல கெடுதல்களுக்கு வித்தாக அமைந்தாலும் மனித உறுப்புத் திருட்டு பற்றி மிகச் சிறப்பாகச் செயல்விளக்கம் தருகிறது. (ரமணா) புனிதமான பல மருத்துவப் பெருமக்கட்கு மத்தியில், இந்தப் பொல்லாக் கூட்டம் இருப்பதையும் விளக்குகிறது. நல்ல மருத்துவர்கள் இந்த நச்சுக் கொடிகளை உலகுக்குக் காட்டினால், இக்கொடுமைகள் நிகழா. உலகம் புகழும்.
திரைப்படத்தின் அரைகுறையை, ஆட்டத்தை விமர்சிப்போர் உறுப்புத் திருட்டுப் பற்றிப் பேசவோ, உரிய நிவாரணம் தேடவோ முனைவதில்லையே, ஏன்?
பள்ளியில் நடக்கும் விபரீதங்களுக்கு முழு நிர்வாகமும் பொறுப்பேற்கிறது. ஒரு மாவட்டத்தில் இதுபோன்ற குற்றம் நிகழ்ந்தால், மாவட்டத் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்பது தவறா? இன்றைய நிலையில் கடுந்தண்டனைகளே நல்ல தீர்ப்பு ஆகும்.
தனியார், பொதுத்துறை என்ற பாகுபாடின்றி, மருத்துவமனைகள் நல்லிதயம் கொண்ட நேர்மையாளர்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
உயிர் காக்கும் தெய்வீகப் பணியாளர்கள் நிறைந்த மருத்துவத் துறையில் பொருள் வெறி கொண்ட சில கொலைகாரக் கறுப்பாடுகள் "போட்டோ பிடிக்கும்" கூட்டமாக, இருட்டுப் படம் தயாரிக்கும் கும்பலாகச் செயல்படத் தொடங்கிவிட்டன. "பணம் பறிக்கும் இடம்" என்பதைத் திரைப்படங்கள் காட்டும்போது, கற்பனை என்று கூறியது, மாபெரும் குற்றம் என்றாகிவிட்டது.
அரசியல் அமைப்புகள், கருணை இயக்கங்கள், தொடர்புடைய துறைகள் இச்சமுதாயத் துரோகக் குற்றவாளிக் கூட்டத்தை வேருடன் களையாவிட்டால், வேதாந்தப் பேச்சுகள் வெற்றுரையாகும்.
கடத்தப்பட்டு, சூடு போடப்பட்ட மாணவனைக் கண்டு, பொறுப்புள்ளோர்க்குத் தம் நெஞ்சு தம்மைச் சுடுகிறதோ இல்லையோ, கொடுமை கண்டு கொதிக்கும் உள்ளம் கொண்ட நல்லோர் கூட்டம், உரிய முறையில் சூடுபோடும் இயற்கை நியதி.
"வெள்ளைக்காரன் ஆட்சியிலே இப்படிப்பட்ட கொடுமையெல்லாம், முளைக்கும்போதே கிள்ளிவீசப்படும்" என்று புலம்புகிற "பெரிசுகளை, "நாட்டுப்பற்று அற்ற, அடிமை மோகம் கொண்ட துரோகக் கூட்டம்" என்று கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எந்த அருள் இதயமும் கூறாது என்பது மட்டும் உறுதி. இருள் அகற்றப்பட்டால்தான் ஒளி பிறக்கும் - வீட்டிலும் நாட்டிலும்!

No comments:

Post a Comment