Saturday, October 30, 2010

பழங்குடிகள் அன்றும் இன்றும்

வனங்களில் இயற்கையின் குழந்தைகளான பழங்குடிகள் தங்களின் சகோதரர்களாக, முன்னோர்களாக, தெய்வங்களாக, மண்ணையும், மரங்களையும், நீரையும், விலங்குகளையும் வழிபட்டனர். பழங்குடிகளின் வாழ்க்கைத் தேவைகளை வனங்களே நிறைவு செய்தன. அவர்களின் தேவைகளும் மிகக் குறைவு. எளிய வாழ்கை முறை. இயற்கையை சிதைக்காமல், இணைந்து வாழ்ந்தனர். சிதைப்பது குற்றம் எனக் கருதினர். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு
வனத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, காய்களை, கனிகளை, கிழங்குகளை உணவாகக் கொண்டனர். தேவைக்கு சிறு விலங்குகளை வேட்டையாடினர். வேட்டையின் போது சினையாக உள்ள விலங்குகளை வேட்டையாட மாட்டார்கள். இனப்பெருக்க காலத்தில் வேட்டைக்கு செல்வதை தவிர்த்தார்கள். வேட்டையை அந்த கிராமமே பகிர்ந்து கொள்வர். இது அவர்களின் சிறந்த பண்புக்கு எடுத்துக்காட்டு.
தங்களது உணவுத் தேவைக்கு அளவான இடத்தில் விவசாயம் செய்தனர். கலப்புப் பயிர் விவசாயம் செய்தனர். மண்ணின் வளத்திற்கு ஏற்ப இடம் பெயர்ந்து விவசாயம் செய்தனர். 10, 15 குடும்பங்களைக் கொண்ட ஒரு இனக்குழு ஒரு கிராமமாக இருந்தது. விவசாயத்திற்காக கிராமமே இடம் பெயர்வது, எளிமையானது. சிறிய வீடுகள், அதே சமயம் தட்பவெப்பநிலைக்கு ஏற்புடையது. தங்களுக்கென தனி மொழி, நீதி, நிர்வாகம், உறவு, எல்லைகளைக் கொண்ட வாழ்க்கை முறை. வனம், நிலம், தனி நபர்களின் உடைமையாக இல்லாமல் வளங்கள் அனைத்தும் சமூக உடமையாகக் கொண்டு வாழ்ந்தனர்.
ஆங்கிலேயர்களின் காலத்தில்
வனங்களிலுள்ளள கனிமங்களை எடுக்க மரங்களை வெட்டினர் ஆங்கிலேயர். வனங்களைச் சிதைத்துக் கொள்ளை அடித்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வனத்தைக் காக்கும் போராட்டத்தை பழங்குடிகள் நடத்தினர். பழங்குடிகளை ஒடுக்கி, வனத்தின் வளத்தை வசப்படுத்த, பழங்குடிகளின் பாரம்பரிய உரிமையை பறிக்கிற வனக் கொள்ளைகளை, சட்டங்களை ஆங்கிலேய அரசு, 1882லிருந்து கொண்டு வந்தது.
பாதுகாக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட காடுகள் என்று அரசு எல்லை நிர்ணயித்து, அந்த பகுதிக்குள் பழங்குடிமக்கள் செல்லவே தடைபோட்டது. வேட்டையாட, விவசாயம் செய்ய, கால்நடைகள் மேய்க்க, சிறு வனப்பொருட்களை பயன்படுத்த உரிமை மறுக்கப்பட்டது. மீறினால் அபராதம், சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
வனம் பாதுகாப்பிற்கென வனத்துறை அதிகாரிகள் தங்க, ஆங்கிலேய அதிகாரிகள் ஓய்வெடுக்க வசதியான இல்லங்கள் வனப்பகுதியில் கட்டப்பட்டன. வன விலங்குகளை வேட்டையாடுவது ஆங்கிலேயர்களுக்கு பொழுதுபோக்கு.
கிராமக்காடுகள் என ஒதுக்கப்பட்ட நிலங்களில் பட்டா வழங்கப்பட்டது. தங்களுக்கென தனித்தனியாக சொத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையற்ற பழங்குடிகளின் உயர்ந்த பண்புகள் வசதி படைத்த பழங்குடி அல்லாதவர்களுக்கு வசதியானது. அதிகாரிகளின் துணையோடு பழங்குடி அல்லாதார் மலை நிலங்களுக்குப் பட்டா பெற்றனர்.
காப்பி, தேயிலை போன்ற பணப்பயிர் பயிரிட பல்லாயிரம் ஏக்கர் மலை நிலங்கள் ஆங்கிலேயருக்கும், அவர்களுக்குத் துணை நின்ற பணம் படைத்தவர்களுக்கும் தாரை வார்க்கப்ட்டது. நிலத்தை இழந்த பழங்குடிகள் தேயிலைத் தோட்டக் கூலிகளாயினர்.
ரயில் பாதை போட, கப்பல் கட்ட, இங்கிலாந்தில் வீடு கட்ட ஓங்கி வளர்ந்த மரங்கள் வெட்டி எடுத்துச் சென்றனர் சமவெளியினர். மின்சாரம், பாசனம் பெற ஆங்கிலேயர்கள் மலை ஆறுகளின் குறுக்கே பாபநாசம், முல்லை பெரியாறு அணை கட்டினர். அதனால் அங்கிருந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர்.
நிலம், வன உரிமை பறிக்கப்பட்ட பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக ஆங்கிலேய அரசு எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை.
சுதந்திரத்திற்கு பிறகு
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த வனச்சட்டங்களை சுதந்திர இந்தியாவில் மேலும் கடுமையாக்கி வனப்பாதுகாப்பு, வன விலங்கு பாதுகாப்பு சட்டங்களை தமிழக அரசும், இந்திய அரசும் கொண்டு வந்தன.
வேட்டையாடும் உரிமை முற்றாக பறிக்கப்பட்டு வன வெளியேற்றம் தொடர்ந்தது. வன விலங்கு சரணாலயம், தேசிய பூங்காக்கள் ஆகியவற்றிற்கு எல்லை வகுக்கப்பட்டு அப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர். காகித ஆலைகளுக்கு வனத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்ட. ஆலைகளின் தேவைகளுக்காக மரங்கள் வளர்க்க வனப்பகுதி ஒதுக்கப்பட்டது.
கனிமங்கள், கருப்புக்கல் போன்றவை எடுக்கவும் மரங்கள் வெட்டவும் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சந்தன மரக் கிடங்குகள் உருவாக்கப்பட்டு பல கோடி மதிப்பு மிக்க சந்தன மரங்கள் வனத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
வனத்தில் விளைகின்ற நெல்லி, கடுக்காய், பூச்சுக்காய், சீமார் புல் போன்ற சிறு வனப்பொருட்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. வன வளம் அரசிற்கு வருவாய் ஈட்டித் தரும் பகுதியாகவே மாற்றப்பட்டது.
பாசன அணை, மின்சார அணை, தேயிலை, காப்பி தோட்டங்கள், நிலக்கரி, எண்ணை, இரும்பு, கருங்கற்கள், தைல, ரப்பர் மரங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், ஆலைகள், அரசு தனியார் ஓய்வில்லங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற அரசு மற்றும் தனியார் வளர்ச்சித் திட்டங்களுக்காக தொன்று தொட்டு வனங்களில் வாழ்ந்த பழங்குடிகளை வெளியேற்றியது அரசு. ஆனால் அவர்களுக்கு வழங்கிய மாற்று இடமோ பொட்டல் காடுகளாக இருந்தன. பழங்குடிகள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தண்ணீரிலிருந்து மீனைப் பிடித்து தரையில் போட்டதைப் போல் அவர்களது வாழ்க்கைச் சூழல் முற்றாக சிதைந்தது. பல்லாயிரம் வருடங்கள் சேமிக்கப்பட்ட அவர்களது அறிவுத் தொகுப்பு, கலாச்சாரம், மனித குலத்துக்கு பயனின்றி போனது. வனம் அழிவிற்கு உள்ளானது.
வனமும், நிலமும், கால்நடைகளையும் இழந்து பரதேசிகளாகப் பழங்குடிகள் மாற்றப்பட்டனர். வனம் அன்னியமானது. வனத்துறையின் ஆதிக்கத்தின் தயவில்தான் வாழும்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.
வீடு கட்ட மூங்கில் வெட்டினாலும், கலப்பைக்கு மரம் வெட்டினாலும், சமையலுக்கு காய்ந்த சுள்ளிகள் பொறுக்கினாலும் வனத்துறைக்கு கப்பம் கட்ட வேண்டும். கால்நடைகள் மேய்க்க வரி கட்ட வேண்டும். வனத்துறையின் எடுபிடிகளாக, பண்ணை அடிமை போல் பயந்து வாழும் நிலையே இன்று நிலவுகிறது.
கடுமையான சட்டங்கள், ஆயுதங்கள், தொலைநோக்கிகள், வாகனங்கள், கம்பியில்லா பேசி, அலுவலகங்கள், வனவர் முதல் தலைமை வனப் பாதுகாவலர் வரை பல்லாயிரம் பேர் பல கோடி மாத ஊதியம். இன்னபிற ஏற்பாடுகள் இருந்தும் வனத்தின் பரப்பு சுதந்திரத்தின் போது இருந்ததை விட மூன்று மடங்கு குறைந்து தமிழக மொத்தப் பரப்பில் 10மூத்திற்கும் கீழ் சென்றுவிட்டதற்கு என்ன காரணம்? தண்ணீர் உற்பத்தி செய்கின்ற மிகப் பெரிய தொழிற்சாலையான வனம், புயல் மழையை நம்பியே தண்ணீரைத் தருகிறது.
வனத்துறையின் தயவோடு, வெளிச்சத்திற்கு வராத வீரப்பன்கள் மரக்கடத்தலையும், வன விலங்கு வேட்டையையும் தொடர்கிறார்கள்.
அப்போது சந்தன கடத்தல் வீரப்பன் நடமாட்டம் ஈரோடு, தருமபுரி காடுகளோடு நின்றது. சேலம்-ஏற்காடு, கல்வராயன் மலை, நாமக்கல்-கொல்லிமலை, விழுப்புரம்-சேர்வராயன் மலை, வேலூர்-ஜவ்வாது, ஏலகிரி மலை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கோவை, நீலகிரி, பழனி, கொடைக்கானல், குமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணாமல் போன சந்தனம், தேக்கு, ஈட்டி மரங்களைக் கடத்தியவர்கள் யார்? பழங்குடிகளா? இதற்கு விடை கண்டால் மட்டுமே வனத்தைக் காக்க முடியும்.
எந்த இடத்தில் என்ன மரம் வளரும், எந்தப் பருவத்தில் விதைகள் முளைக்கும், விலங்குகளின் கணம், மரத்திருடர்களின் நடமாட்டம் பற்றி முழுமையாக அறிந்த பழங்குடிகளை புறக்கணித்து, அவர்களை வனத்திலிருந்து அன்னியமாக்கியதே வனப்பரப்பு குறையக் காரணமாகியது. பழங்குடிகளை ஈடுபடுத்தா வன வளர்ப்புத் திட்டங்கள் வெற்றி பெறா.
வனம் காக்க பழங்குடிகள் காக்கப்பட வேண்டும்
பழங்குடிகளுக்கான எளிய பாடத்திட்டம், வனம் சார்ந்த கல்வி, ஆரம்ப பள்ளி வரை அவரவர் தாய்மொழியில் கல்வி, விடுதியில் அவர்களது உணவு, குடும்பத்தினருக்கு உதவும் வகையில் பள்ளி நேரம், விடுமுறை, நடுநிலைப் பள்ளி வரை தனித்த பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும்.
நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். இழந்த நிலங்களை மீட்க வேண்டும். மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் போல் தமிழகத்திலும் நிலங்கள் கை மாறுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும். வனத்தின் மீதான உரிமை, வனம் தங்களது என்ற உணர்வு மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். வன வளர்ச்சி, பாதுகாப்புப் பணியில் பழங்குடிகளை நியமனம் செய்ய வேண்டும். ரேசன் கடைகளில் ராகி, கம்பு, பருப்பு, துணி வழங்க வேண்டும். சரிவிகித உணவு இன்றி ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை, பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இப்படி இவர்களை காக்கத் தவறினால் வனம் அழியும். தூய காற்றுக்கும், மழைக்கும், தண்ணீருக்கும் தட்டுப்பாடு மேலும், மேலும் அதிகரிக்கும்.
பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு பதிவு செய்யப்பட வேண்டும். இவர்களை ஆராய, காத்திட, பழங்குடிப் பல்கலைக்கழகம் அவசியம்.
உலகமயச் சூழலில் மலை நிலங்கள் வீட்டுமனைகளாக, சுற்றுலா தலங்களாக மாற்றப்படுகின்றன. இயற்கை சுற்றுலாவிற்கும் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் குடிக்கும் பணப்பயிர் விவசாயம், ஆழ்குழாய் கிணறுகள், புதிய வேளாண்முறைகள் போன்றவை, ஓடைகளை வற்ற வைத்துவிட்டன. வன வலங்குகள் கோடையில் தண்ணீருக்கு அலைகின்றன.
பழங்குடிகளின் தற்சார்பு வாழ்க்கை முறை சிதைந்து நுகர்வு கலாச்சாரத்தால் சாலையோரம் நின்று வாகனங்களில் வருவோரை பிச்சை கேட்கும் குரங்குகள் போல் மாற்றப்படும் பழங்குடிகளைப் பாதுகாப்பது மிக மிக அவசியம்.
இவர்களுக்கென அமைப்பு, இவர்களுக்கான அமைப்பு அவசியம்.

No comments:

Post a Comment