Tuesday, October 26, 2010

உறவுகளையும், நட்புகளையும் நாடி

உறவுகளையும், நட்புகளையும் நாடிTamil Katturaikal - General Articles
மார்ச், ஏப்ரல் மாதங்கள் என்றாலே படபடப்பான மாதங்கள் என்று பொருள். தேர்வுகள் கழுத்தை நெரிக்க, மதிப்பெண்கள் மனத்தை அலைக்கழிக்க பாடாய்படுத்தும் மாதங்கள்! கண்துஞ்சாமல், பசி நோக்காமல் பாடம் படிக்கும் மாதங்கள். பிள்ளைகளை விட அவர்களின் பெற்றோர்கள் அதிகம் பயப்படும் மாதங்கள். எனவேதான் முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
முன்பெல்லாம் பரீட்சை முடிந்த அன்றே, புத்தகங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சொந்தக்காரர்களுடைய வீடுகளுக்கு வண்டி ஏறி விடுவோம். அத்தை, மாமா, பாட்டி என்று எல்லோருமே நம்மைத் தங்கள் வீட்டிற்கு வரச்சொல்லி அன்புடன் அழைத்திருப்பார்கள். நாமும் முறை போட்டுக் கொண்டு செல்வோம். எல்லா வீடுகளும் உறவுகளால் நிரம்பி வழியும். கிராமத்திலுள்ள தாத்தா, பாட்டி வீடுகள் களை கட்டும். பட்டணத்துப் பிள்ளைகளுக்கு, கிராம வாசம் மிகவும் வித்தியாசமான, நல்ல அனுபவமாக இருக்கும். பள்ளிப்பாட நினைப்பே இன்றி, கிராமக் கோயில்களிலும், குளக்கரையிலும், வயல் வரப்புகளிலும், மதகுகளிலும் சுற்றிக் கொண்டு கிராமத்து விடலைகளுடன் முதலில் கௌரவம் பார்த்துத் தயங்கி, பின் நட்பு கொண்டு சுற்றுவர் பையன்கள். பெண் குழந்தைகள் பல்லாங்குழி, தாயம், பாண்டி என்று ஆடிக் கொண்டும், கோலம் கற்றுக் கொண்டும் பொழுதைக் கழிப்பர். (அப்போது டி.வி. இல்லை).
பெரிய நகரங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்குச் சென்றால், அங்கும் வேறு புதிய அனுபவம் கிட்டும். அந்த நகரின் பல இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்வர். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது உற்சாகத்துடன் கிளம்புவோம். பள்ளி திறந்ததும் ஆசிரியர் கொடுக்கும் கட்டுரைத் தலைப்பு "விடுமுறையைக் கழித்த விதம்", என்பதாகத் தான் இருக்கும்.
ஆனால் இக்காலக் குழந்தைகள், பாவம். கோடை விடுமுறை என்றால் அவர்கள் அகராதியில் வேறு அர்த்தம். உறவுகளிடையே அந்நியோன்யம் குறைந்துவிட்டது. அவரவர்க்கு ஆயிரம் பிரச்சினைகள், கஷ்டங்கள், இதில் நாம் வேறு ஏன் போய் அவர்களை சிரமப்படுத்த வேண்டும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. நம் வாழ்க்கை முறையிலும், போக்கிலும், பார்வையிலும் எத்துணை பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது! உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் வீட்டில்கூட உரிமையுடன் போய்த் தங்கத் தயங்குகிறோம். காரணம் அவர்களின் தினசரி ஓட்டத்திற்கு நம்மால் ஏதும் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்கின்ற முன்னெச்சரிக்கை உணர்வு. பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போகின்றனர். இங்கு நாமும் அப்படியே. நம் பிள்ளைகளை மட்டும் அங்கு அனுப்பினால் அவர்களால் எப்படி சமாளிக்க முடியும் என்ற யதார்த்தமான உண்மையும் ஒரு காரணம். மூட்டை முடிச்சோடு போய் உறவினர் வீட்டில் டேரா போடும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு இப்போதெல்லாம் அர்த்தமே இல்லை. அப்படியே நாம் போய் நம் உறவினர் வீட்டில் தங்குவதாக வைத்துக் கொண்டாலுமே, பல விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஓரிரு நாள்களில், தேய்பிறை ஆவதற்கு முன் அகமும் முகமும் மலர நாம் விடைபெற்றுக் கொண்டு வந்துவிட வேண்டும். கட்டாயம் அடுத்த விடுமுறைக்கு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதி போல கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும். ஆனால் ஒரு சில ஆண்டுகள் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அடிக்கடி போனால் மரியாதை கம்மி.
இதில் யார் பக்கமும் தவறு இல்லை. வழியோடும், வகையோடும், அறிவோடும், தெளிவோடும், உயிரோடும், உணர்வோடும், படைப்பாற்றல் நோக்கோடும் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை. உறவுகளிடையேயும், நட்புகளிடையேயும் குற்றம் பார்த்தால், மனம் சுருங்கிப் போய் வாழ்க்கை அர்த்தமற்றதாக, அனர்த்தமாக ஆகிவிடுகிறது.
சமீப காலமாக, குழந்தைகளை விடுமுறை நாள்களில் எப்படி சமாளிப்பது என்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் கோடை வகுப்புகள் பலவும் தற்போது பெருகி வருவதால் பெற்றோர்களுக்கு நிம்மதி. குழந்தைகளுக்குப் பொழுதும் நன்றாகப் போகும்; ஏதோ நீச்சல், ஓவியம், கம்ப்யூட்டர், யோகா என்று எதையேனும் கற்றுக் கொள்ளட்டும் என அனுப்பி விடுகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால், குழந்தைகள் தங்களுடைய விடுமுறை நாள்களை உபயோகமாகக் கழிப்பதுபோல்தான் தோன்றும். ஆனால் உண்மையில் அங்கும் ஓர் அட்டவணை பின்பற்றப்படுகின்றது. சரியான நேரத்திற்கு அவ்வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், குழந்தைகளால் அதிக நேரம் உறங்க முடிவதில்லை. எப்போதும் போல எழுந்து, அரைகுறையாகச் சாப்பிட்டு விட்டு ஓடுகிறார்கள். பல குழந்தைகள் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர். காரணம் வீட்டில் அவை தனியாக இருப்பதை விட, மற்ற குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கட்டுமே என்று எண்ணுகின்றனர். இதைப் பயன்படுத்தி, பணம் பண்ண ஆரம்பித்துவிட்டனர் சிலர். சில பேராசைக்காரப் பெற்றோர், கோடை விடுமுறை விட்ட உடனே, அடுத்த வகுப்புப் பாடப்புத்தகத்தை வாங்கித் தந்து, அவற்றைத் திணிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இப்படிச் செய்வதால் பாடத்தின் மீதே வெறுப்புதான் வரும்.
குழந்தைகளுக்குக் கல்வி அவசியம்தான். அதேசமயம் இந்த உலகம் என்பது என்ன? அது எப்படி இருக்கிறது? அதன் நடைமுறையில் சாதிக்கக் கூடியவை என்னென்ன என்பதை நன்கு அலசி ஆராய்ந்து விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டியதும் முக்கியம். உலக ஞானம், நடைமுறை அறிவு என்பதும் அவசியம். வானளாவிய கற்பனையும் வேண்டும்; அந்தக் கற்பனையை அடக்கவல்ல நடைமுறை அறிவும் வேண்டும். அந்த நடைமுறை அறிவு பல அனுபவங்களால் தான் கிட்டும்.
குழந்தைகள் என்ன, நாம் சாவி கொடுத்தால் ஓடும், ஆடும், பாடும் பொம்மையா? அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை, பெரியவர்களாகிய நாம், நம் பேராசை காரணமாகவும், இயலாமை காரணமாகவும் புறக்கணிக்கலாமா?
நாம் ஒவ்வொருவரும் ஒரு தனித்தனி தீவாகத் தான் வாழ்கிறோம். அதைவிட்டு, கண்டிப்பாகப் பிள்ளைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்ப வேண்டும். அங்கு போய் இருந்தால்தான், அங்குள்ள சூழலுக்குப் பழகிக் கொள்வார்கள். வீட்டில் அடம் பண்ணும், யாருக்கும் விட்டுக் கொடுக்காத பிள்ளை கூட, அங்கே தன்னை மாற்றிக் கொண்டு, எல்லோருடனும் அனுசரித்துப் போகப் பழகிக் கொள்ளும். உறவுகள் இனிமையானவை, அவை நமக்கு வாய்ப்பவை. அவ்வுறவுகளை கட்டிக் காக்க வேண்டுமென்றால், தொடர்பு விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உறவினர் இல்லங்களுக்குச் செல்ல வழியில்லையென்றாலோ, மனமில்லையென்றாலோ, நம் சக்திக்கு ஏற்றவாறு குழந்தைகளை அருகிலுள்ள சில இடங்களுக்காவது அழைத்துச் செல்ல வேண்டும். புதிய ஊர்களை, புதிய மனிதர்களைச் சந்திக்கட்டும். ஒரே குழந்தையாக சிராடலில் வளர்ந்து வருவோர், நம் நாட்டின் நிதர்சனமான உண்மையைக் கண்டால், பொருள்களை வீணாக்க மாட்டார்கள்; பார்க்கும் எல்லாவற்றையும் வாங்கித் தந்தாக வேண்டும் என அடம் பிடிக்க மாட்டார்கள். இன்னொன்றும் முக்கியம். குழந்தைப் பருவத்தில்தான் ஊர் சுற்றுவது (அந்த சுற்றுவது அல்ல) பிடிக்கும்; குதூகலம் கொப்பளிக்கும். அந்த இனிமையான நாள்கள் நம் நெஞ்சில் நீங்காது, ஆசனம் போட்டு அமர்ந்துவிடும்.
வாழ்க்கையை இனிமையானதாக, சுவையானதாக, ரசமானதாக மாற்றிக் கொள்வது நம் கையில்தான் உள்ளது. பணத்தின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருந்தால் நில்லா இளமையைத் தொலைத்துவிட்டு, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்த கதை ஆகி விடும். எனவே இந்தக் கோடை விடுமுறையில் இனிய கனவுகளுடனும், நம்பிக்கையுடனும் புறப்படுவோம் - மறந்த உறவுகளையும், நட்புகளையும் நாடி!

No comments:

Post a Comment