Saturday, October 30, 2010

விண்வெளியில் குவிந்து வரும் குப்பை

விண்வெளியில் குவிந்து வரும் குப்பை (

பகல் நேரத்தில் அண்ணாந்து ஆகாயத்தைப் பாருங்கள். மேகங்கள் இல்லாவிடில் வானம் ஒரே சிராக மங்கிய நீல நிறத்தில் தெள்ளத் தெளிவாக இருக்கும். நம் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் வானில்-சரியாகச் சொல்வதானால் விண்ணில் குப்பை கூளம் மிக நிறைய உள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். விண்வெளியில் பல நூறு கிலோ மீட்டர் உயரத்தில் சிறியதும் பெரியதுமாக பல ஆயிரம் ஓட்டை உடைசல்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் செயலற்றுப் போன செயற்கைக்கோள்களின் கழன்ற உறுப்புகள்; செயற்கைக்கோள்களைச் செலுத்திய ராக்கெட்டுகளின் உடைந்த பகுதிகள்.
இவை எங்கே நம் தலை மீது வந்து விழுந்துவிடுமோ என்று கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இவை அனைத்துமே மிக உயரத்திலிருந்து கீழே இறங்கி காற்று மண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக நாசமடைந்து விடுகின்றன. செயற்கைக்கோளை உயரே செலுத்திய பிறகு மிஞ்சுகிற ராக்கெட்டின் பெரிய துண்டுப் பகுதியாக இருந்தாலும் சரி, இவ்விதம் எரிந்து அழிந்து போய் விடும். 1979-ம் ஆண்டில் அமெரிக்க ஸ்கைலாப் விண்கலம் பூமியை நோக்கி இறங்கிய போது பெரும் பீதி கிளப்பப்பட்டாலும் அது யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. 2001-ம் ஆண்டில் 143 டன் எடை கொண்ட ரஷிய மிர் விண்கலம் கீழே விழுந்த போதும் சரி, எவ்வித விபரீதமும் ஏற்பட்டு விடவில்லை. அந்த விண்கலத்தின் பெரும் பகுதி காற்று மண்டலத்தில் நுழைந்தபோது தீப்பற்றி அழிந்தது. எஞ்சிய 27 டன் அளவிலான துண்டுப் பகுதிகள் கடலில் விழுந்தன. அப்படியானால் விண்வெளியில் உலவும் ஓட்டை உடைசல் பற்றி விஞ்ஞானிகள் எதற்காகக் கவலைப்பட வேண்டும்?
பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஓட்டை உடைசல்களால் கீழே இருப்பவர்களுக்கு ஆபத்து இல்லைதான். ஆனால் உயரே செலுத்தப்படுகிற விண்கலங்களுக்கும் அதில் இருக்கிற விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது பற்றித்தான் இப்போது விஞ்ஞானிகளுக்குக் கவலை.
பிப்ரவரி முதல் தேதியன்று அமெரிக்க கொலம்பியா" விண்வெளி ஓடம் கீழே இறங்கிக் கொண்டிருந்த போது வானில் வெடித்து கல்பனா சாவ்லா உட்பட 7 அமெரிக்க விண்வெளி வீரர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம். கொலம்பியா விண்கலத்தின் இடது புற இறக்கை மீது ஏதோ ஒரு பொருள் மோத, அதனால் இறக்கையில் ஏற்பட்ட ஓட்டை காரணமாகவே அது வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இப் பின்னணியில்தான் பல்வேறு நாடுகளின் விண்வெளி அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஐரோப்பாவில் வியன்னா நகரில் கூடி விண்வெளியில் உள்ள குப்பை பற்றி விவாதித்தனர். விண்வெளியில் குப்பை சேர விடாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி ஆராய்ந்த அவர்கள், விண்வெளி பற்றிய ஐ.நா. அமைப்புக்குத் தங்களது பரிந்துரைகளை அளிப்பர்.
விண்வெளியில் ஒரு கால்பந்தை விடப் (பெரிய அளவிலான அது செயலிழந்த செயற்கைக் கோளாகவும் இருக்கலாம்) பொருட்கள் சுமார் 10 ஆயிரம் உள்ளன. இவை அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. ராணுவ ராடார்கள், மற்றும் தொலைநோக்கிகள் மூலம் இவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க விண்வெளி ஓடம் விண்ணில் செலுத்தப்படுகிறது என்றால் அப்போது இந்த ராடார்களும், தொலைநோக்கிகளும் மிகத் தீவிரமாக வானை ஆராய்கின்றன. விண்வெளி ஓடம் செல்லச் செல்ல அதன் முன்னே சுமார் 50 கிலோமீட்டர் தூரம் வரை ஒன்றும் இல்லை என்பதை இவை தொடர்ந்து உறுதிப்படுத்தியபடி உள்ளன.
ஆனால் விண்வெளியில் ஒரு சென்டிமீட்டர் முதல் 10 சென்டிமீட்டர் வரை குறுக்களவு உள்ள (பெரிய ஆரஞ்சுப் பழ சைஸ்) பொருட்களை ராடார் மூலம் கண்டுபிடிக்க முடியாது. விண்வெளியில் இருக்கிற இந்த அளவு சிறிய பொருட்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் முதல் 3 லட்சம் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஓடம், ரஷிய சோயுஸ் விண்கலம் போன்றவற்றின் வெளிப்புறப் பகுதி உறுதியான பொருட்களால் ஆனது. ஒரு சென்டிமீட்டர் அல்லது அதைவிடச் சிறிய பொருள் தாக்கினால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால் ஒரு சென்டிமீட்டர் குறுக்களவுக்கு (கோலிக்குண்டு சைஸ்) மேல் உள்ள பொருள் தாக்கினால் பிரச்சினைதான்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஓடம் தரை இறங்கிய பின்னர் சோதிக்கப்பட்ட போது அதன் ஜன்னல் கண்ணாடியின் 3 அடுக்குகளில் வெளிப்புற அடுக்கு சேதமடைந்திருந்தது. பெயிண்ட் துணுக்கு போன்றவை மோதியதே காரணம் என்று தெரிய வந்தது. பெயிண்ட் துணுக்குதான் என்றாலும் அது மணிக்கு 32 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து மோதுவதாக இருக்கும்.
விண்வெளியில் குப்பை சேர்ந்து வருவதற்குக் காரணம் உள்ளது. 1957-ல் தொடங்கி விண்ணில் எண்ணற்ற செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. இப்போது விண்வெளியில் செயலில் உள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை சுமார் 700 ஆகும். செயலிழந்த செயற்கைக்கோள்கள் எத்தனையோ!
இவை எல்லாம் பூமியிலிருந்து ஒரே உயரத்தில் சுற்றுவதாகச் சொல்ல முடியாது. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் உள்ளன. இந்த உயரத்தில் இப்போது செயலில் உள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை சுமார் 320. இந்த உயரத்துக்கு அனுப்பப்பட்டுப் பிறகு செயலிழந்த செயற்கைக்கோள்கள் பூமியை நோக்கி இறங்க சில நூற்றாண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மிக உயரத்தில் உள்ளவை மெதுவாகத்தான் கீழே இறங்கும். வேறு பல செயற்கைக்கோள்கள் சுமார் 700 முதல் 1500 கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றுகின்றன. இவை எல்லாம் ஆளற்ற செயற்கைக்கோள்களே.
விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் அமெரிக்க, ரஷிய விண்கலங்கள் உத்தேசப் பணிகளைப் பொருத்து 165 முதல் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறப்பவை. பல நாடுகள் சேர்ந்து அமைக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் கிட்டத்தட்ட இந்த உயரத்தில் பறக்கிறது. இந்த உயரத்துக்கு மேலே உள்ள செயற்கைக்கோள்கள் உடைந்தால் அதன் துண்டுகள் இந்த விண்கலங்களின் பாதையில் குறுக்கிட வாய்ப்பு உள்ளது. 2001 நவம்பரில் இந்த உயரத்துக்கு சற்று மேலே இருந்த ரஷிய காஸ்மாஸ் செயற்கைக்கோள் உடைந்தபோது அதன் 300 துண்டுகளால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சப்பட்டது. நல்ல வேளையாகப் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.
எதிர்காலத்தில் விண்வெளியில் மேலும் மேலும் நிறைய எண்ணிக்கையில் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து செலுத்தப்படும். இவை செயலிழந்த பின் எளிதில், அதுவும் விரைவாக அழியும்படிச் செய்யப்பட்டால் குப்பை சேரும் வேகம் குறையும். இதற்குக் குறைந்தது இரண்டு வழிகள் உள்ளன. செயற்கைக்கோள் ஒன்று வானில் வெடித்துச் சிதறாதபடியும், அதிலிருந்து உறுப்புகள் தனியே கழன்று விடாதபடியும் வடிவமைக்க வேண்டும். அவை 25 ஆண்டுகளுக்குள் கீழ் நோக்கி இறங்கி அழியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஒரு சமயம் ஒரு செயற்கைக்கோள் செயலிழந்தபோது அதன் காமிரா கழன்று தனியே விண்ணில் சுற்ற ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க, ரஷிய செயற்கைக் கோள்கள், தர நிர்ணயப்படி வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் தகவல் தொடர்புக்காகத் தனியார் துறையினர் தயாரிக்கும் பல செயற்கைக்கோள்கள் இந்த வகையில் இருப்பதில்லை. ஆகவே இந்த விஷயத்தில் உலகம் தழுவிய அளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே விண்ணில் உள்ள ஓட்டை உடைசல்களை லேசர் கற்றையைச் செலுத்தி அழிக்க இயலும் என்றாலும் இது இப்போதைக்கு நடைமுறைச் சாத்தியமானதாக இல்லை.

1 comment: