Saturday, October 30, 2010

என்ன வித்தியாசம்?

என்ன வித்தியாசம்?
ஏறக்குறைய 25 ஆண்டுகளாகியிருக்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், ஆந்திரத்திலிருந்து ஓர் உறவுப் பெண், குரோம்பேட்டைத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஆசியராகப் பணிபுரிய வந்தாள். உறவுக் குடும்பத்துடனே தங்கியிருந்து பணிக்குச் சென்று வாழ்வது அவளுக்கு உகந்ததாகப்படவில்லை. எனவே தங்குவதற்கு ஒரு தனியிடம் பார்த்துத் தர என் உதவியைக் கோரினாள். அக்காலத்தில் அந்தப் பகுதிகளில் வசதியான மகளிர் விடுதிகள் இல்லை. நானும் அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு, தாம்பரம் பகுதிகளில், அவள் தங்கி, சமைத்து, உண்டு, பணிக்குச் சென்று வர, பல வீடுகளில் வாடகைக்கு இடம் கேட்டேன். ஆனால் வீடுகளில் வாடகைக்கு என்ற பகுதிகள் காலியாக இருந்தும், ஒரு திருமணமாகாத பெண்ணுக்கு வாடகைக்கு விட எவரும் இசையவில்லை. வயதான தம்பதி, தனியே ஒரு பகுதியில் இருந்து கொண்டு, இன்னொரு பகுதியை வாடகைக்கென்று விட்டிருப்பவர்கள் கூட, இந்த இளம்பெண்ணுக்கு அந்தப் பகுதியைவிட இசையவில்லை. திருமணமாகாத ஆண்களுக்கு இத்துணை கண்டிப்புகளில்லை. ஆனால் அந்த ஆண் செய்யும் உதவிகளுக்கு மேலாக இவள் அவர்களுக்கு உதவ முடியும். அதேசமயம் அவளுக்கு அவர்கள் பாதுகாப்பாகவும் இருக்க முடியும். ஏனோ தெரியவில்லை. திருமணமாகாத, வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண், நன்னடத்தையுடையவளாக இருக்க மாட்டாள் என்ற அனுமானமே, ஓர் ஒடுக்குதல் முத்திரையாக இருந்தது.
அந்தப் பெண் பிறகு எழும்பூரில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கப் போனாள். அவளுக்குக் காலை எட்டு மணிக்குள் கல்லூரிக்கு வரவேண்டும். எனவே விடுதியில் இருந்து ஏழு மணிக்குள் கிளம்பிவிட வேண்டும். அந்த நேரத்தில் விடுதியில் காலை உணவோ, மதிய உணவோ எதுவும் கிடைக்காது. ஆனால் இவை அனைத்துக்கும் அவள் மொத்தமாகப் பணம் கட்டியாக வேண்டும். என்னை இடையில் ஒருநாள் வந்து சந்தித்துச் சங்கடங்களைச் சொல்லி, வேலையை விட்டுவிட்டுப் போவதாகத் தீர்மானம் செய்திருப்பதையும் தெரிவித்தாள். ஐந்தாறு மாதங்கள் சென்ற பின் அவள் பெங்களூரில் நல்ல வேலையிலிருப்பதாகவும், அங்கு தங்குவதற்கு மகளிருக்கான வசதியுள்ள விடுதிகள் இருப்பதாகவும் எனக்கு எழுதினாள். திருமணமாகாத பெண்களுக்குத் தனியே தங்க இட வசதி எல்லா இடங்களிலும் எளிதாக இல்லை. என்றாலும், சென்னையைப் போல், மகளிர் வேலைக்குப் போனாலே ஒழுக்கக் குறைவானவர்களாகி விடுவார்கள் என்ற அனுமான முத்திரை குத்தி விடுவதில்லை என்று தோன்றுகிறது.
அண்மையில், அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் லட்சுமி பண்டிட், திருமணமானவள் என்ற உண்மையை மறைத்த குற்றத்தை ஏற்று, அழகிப் பட்டத்தைத் திருப்பித் தந்திருப்பதாகச் செய்தி வெளிவந்தது. இது இந்நாட்டிலுள்ள பெண் சார்ந்த கலாசார ஒடுக்குதல் சித்தாந்தங்களின் மோசடிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதில் வேதனை தரும் நடப்பியல், பெண்கள் கண்டுகொள்ளாமலே தலைகுனிந்து ஏற்பதுதான்.
அழகிப் போட்டி சமாசாரமே நம் கலாசார மரபில்லை. கண்ணகி, சிதை, நளாயினி என்று மாதிரிகளைக் காட்டி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் குடிகாரக் கணவர்களிடம் வதைபடும் ஆயிரமாயிரம் பெண்கள் உயிரை மாய்த்துக் கொள்ள, கழுத்தை நெரிக்கும் கற்புக்கலாசாரமே வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. ஆணுக்கு எந்தக் கலாசாரமும் கிடையாது. எனவே, அவனுடைய ஆதிக்கங்களை, பெண் குலத்தின் மீதுள்ள உரிமையைப் பதிக்க, அழகுப்போட்டி என்ற கலாசாரம் சிறுமிகள் கல்வி பயிலும் பள்ளிகளைக் கூட விட்டுவைக்காமல் அரங்கேறுகிறது. பெண் வர்க்கத்தை நுகர் பொருள் வாணிபச் சரக்காக்க, இது ஏதோ அவள் உரிமை என்ற கருத்தையும் தந்திரமாகப் புகுத்துகிறது. சந்தை, வாணிபமே, மக்கள் தொடர்புச் சாதனங்களாகிய ஊடகங்களுக்கும் இலக்காகிப் போனதால், கலாசாரம் என்ற பெயரில், இரண்டு எதிர் எதிர் முனைகளும் பெண்ணுடலைக் குறி வைத்து, மூளைச்சலவை செய்யவே இயங்குகின்றன.
கலாசார மரபுகளின் வழுவாத தொடர்களாலும், ஆடை உரித்து ஆடவைக்கும் பாடல் காட்சிகள், விளம்பரங்கள் ஆகிய சேவைகளாலும் மக்களின் வாழ்வில் இன்றியமையாத இடம்பெற்றிருக்கிறது.
மாட்டு வாணிபப் பேரத்தில் விற்பவரும் வாங்குபவரும் தத்தம் கை விரல்களின் மேல் துணி போர்த்து, விரல்களைத் தொட்டு பேரம் முடிப்பார்களாம். ஏனெனில் அந்த மாட்டுக்கு இந்தச் சொந்தக்காரனிடம் இருந்து இன்னொருவனிடம் போகிறோம் என்று தெரியக்கூடாதாம்! அந்த அளவுக்கு விலங்கு விற்பனையின் போது காட்டப்படும் பண்பாடுகள் கூட, இந்தப் பெண் வாணிபத்தில் இல்லை. பத்துப் பேர் முன்னிலையில் ஆடைகள் உரியப்பட்ட நிலையில் பவனி வருவதும், அவர்களைத் தேர்ந்தெடுப்பதும், ஒரு காப்பாளன் என்ற திருமண உரிமையாளன் இருக்கும் போது, நெருடலைத் தோற்றுவிக்குமாம்! வெற்றி பெற்ற பெண், குடியிருக்க இடம் வேண்டி ஒரு பொய்ச் சான்று கொடுத்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறாள். விதிகள், திருமணம் என்று மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, கன்னிமை குறித்து ஏதும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. ஓர் அயல்நாட்டில் இந்தியப் பெண் நுழையும் போது, கன்னிமைக்கான சோதனை கட்டாயமாக்கப்பட்ட போது, தீவிரப் போராட்டம் தோன்றியது.
இப்போது, பலரும் ஓர் உடலை உரிமையாக்கிக் கொள்ள, இவள் சம்பந்தமான அழகு சாதனங்கள், உள்ளாடை, மேலாடைகள் அனைத்தையும் விற்பனை செய்ய, இவளுக்கென்று உரிமையுள்ளவன் இருக்கலாகாது! இது மட்டுமே கலாசாரம்!
உடல் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சில பணிகளுக்கும், திருமணமாகாதவர் என்ற நிலை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பணி ஓய்வு, மூப்பு என்ற விதிகளில் கூட, ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமை காட்டப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் போராட்டம் தேவையாகிறது. ஆனால், இந்தக் கவர்ச்சித் தத்துவத்தை, காட்சி ஊடகமாகிய தொலைக்காட்சி, பல்வேறு தொழில் நுணுக்க உத்திகளைக் கையாண்டு, பெண்களின் அறிவு சார்ந்த சிந்தனைத் தெளிவை மழுங்கடித்துவிடுகிறது. இவர்கள் தாமே உடல்களைக் காட்டிக் குதிக்கிறார்கள்? மறுக்கலாம் இல்லையா? என்று பொதுவாகப் பழியைத் திருப்பிவிட்டு, அந்தக் காட்சிகளை ரசிக்கும் ஆண்களே அதிகமானவர்கள். கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு என்ற ஹிட் பாடலை பாடுபவள் சிவப்பாகவே இருக்கிறாள். இந்தப் பாடலின் இலக்கு, தான் கட்டிக் கொள்ளும் ஆண் கறுப்பாக இருப்பதே மகிழ்ச்சி என்ற ஒப்புதல் வாக்குமூலம்!
ஆக, பெண், இருத்தலுக்காக, எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்ற நிலைக்கு நாள்தோறும் தள்ளப்படுகிறாள்.
நூற்றாண்டுகளாக அவளை ஒடுக்கி அடக்கிய கலாசார வடுக்கள் இன்றைய கல்வி மேம்பாடுகளிலும் தன்னுணவர்வுப் போராட்டங்களிலும் அழியவில்லை.
நலங்கள் வற்றிய வறுமைச் சூழலில் இவள் அடுத்தடுத்துப் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்கிறாள். ஓர் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகக் கருத்தடை நலத்திட்டத்தைச் செல்லாக்காசாக்கி, தண்டனைகளையும் ஏற்றுக் கொள்கிறாள். அழகிப் போட்டியில் உலகறிய வெற்றி பெற்ற பின், போலி விதியை ஏற்று, பட்டத்தைத் திருப்பிய நாகரிகப் பெண்ணுக்கும், அடுத்தடுத்துப் பெண் குழந்தையைக் கொன்று சிறைவாசம் ஏற்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?

No comments:

Post a Comment