Friday, October 1, 2010

திரையரங்குகளுக்குள் ஒரு தீபாவளி

துபாயில் நேற்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர். படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் இப்படிக் கூறினார்: "சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி - ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது. எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள். எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை, ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன். ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி - ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது. படத்தின் பாடல்களுக்காகவேத் தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்..." என்றார் அவர். அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நேற்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ 3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு. நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார். ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்குத் திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் வெளியாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள். உலகமே கொண்டாட தவம் கிடக்குதுன்னா சும்மாவா..........?

No comments:

Post a Comment