Friday, October 1, 2010

காதலை மழையாகவும்,எதிர்ப்பை வெயிலாகவும் சொல்லும் படம்

கவிஞர்கள் தும்மினால் கூட அதில் ஒரு இலக்கிய ரசனை இருக்கும். ஏகாதேசி பேசும்போதும் அப்படிதான் இருந்தது. பல திரைப்பட பாடல்கள் எழுதியிருக்கும் ஏகாதேசி முன்னணி இயக்குநர்கள் பலரிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர். ஒரு காதல் கதையை ரசிக்க ரசிக்க படமாக்கிக் கொண்டிருக்கிறார் இப்போது. படத்தின் பெயர் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை'. காதலை மழையாகவும், அந்த காதலுக்கு வரும் எதிர்ப்பை வெயிலாகவும் சொல்லியிருக்கிறேன் என்று சுலபமாக துவங்குகிறார் தனது பேச்சை. எல்லார் வாழ்க்கையில் நடந்த காதலாகவும் இருக்கும். யார் வாழ்க்கையிலும் நடக்கக் கூடாத காதலாகவும் இருக்கும். இதுதான் என் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை. ஒரு நெருப்புத் துண்டும் அடர்ந்த மலையும் காதலித்ததால்தான் பூமி தோன்றியது. காதலர்களின் கால் தடங்களால் பூமி நிறைந்திருப்பதால்தான் வண்ண வண்ணமாய் பூ பூக்கிறது. பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் குடும்ப பாரத்தை சுமந்து திரியும் எத்தனையோ மனிதர்களையும் வீட்டின் கூரையை கடந்தும், வெட்டப்பட்டும் போன எத்தனை மரங்களையும், எல்லா நூற்றாண்டிலும் ஒரே ஒரு நிலாவையும் காதலுக்கு சாட்சியாக்கியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த படத்தில் கம்மங்காட்டு பொம்மையை காதலுக்கு சாட்சியாக்கியிருக்கிறோம் என்ற ஏகாதேசி பேசும்போது ஒவ்வொரு வார்த்தைகளும் மெட்டுக்கு தயாராவதை போல உருவாகிறது. (கவிஞராச்சே) தேஜ், நட்சத்திரா என்ற புதுமுக காதல் ஜோடியை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறாராம். எல்லா இயக்குநர்களும் தன் முதல் கதையையே படமாக்கியதில்லை. ஆனால் ஏகாதேசிக்கு வாய்த்திருக்கிறது அந்த அதிர்ஷ்டம். அதற்கு காரணம் என் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகரன்தான் என்கிறார் இவர். இதற்கு முன் வீரசேகரன் என்ற படத்தை தயாரித்தவர்தான் இந்த சந்திரசேகரன். சிங்கப்பூர் பார்ட்டி. முதல் படம் சற்று காலை வாரிவிட்டது உண்மைதான் என்றும், அதிலிருந்து கற்ற பாடத்தை வைத்து, இப்போது தெளிவாக களமிறங்கியிருப்பதாகவும் கூறினார். இந்தப் படத்தை முழுவதுமாக திட்டமிட்டபடி முடிச்சிட்டோம். போட்டுப் பார்த்ததில் ஏக திருப்தி. நிச்சயம் எனக்கு பேர் வாங்கித் தர்ற படமா இருக்கும்னு நம்புறேன், என்றார் தயாரிப்பாளர் சந்திரசேகரன். படத்துக்கு ஒளிப்பதிவு சுகுமார். பி.ஆர்.. கோவிந்தராஜ். பரணி இசை அமைத்துள்ளார். காதலர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீ­ருக்கும் இந்த சமூகமே காரணம். ஒரு ஞாயிற்றுகிழமையைக் கூட கொண்டாடுகிற இந்த சமூகம் காதலை மட்டும் ஏன் தண்டிக்கிறது. இந்த கேள்விக்கு பதில் கேட்டுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன், என்றார் ஏகாதேசி மறுபடியும்! மூன்று பாடல்களைப் போட்டுக் காட்டினார்கள் இயக்குநரும் தயாரிப்பாளரும். உண்மையிலேயே அருமையாக வந்திருந்தன. குறிப்பாக 'யாரடிச்சி அழுதது உன் வாழ்க்கை' என்ற பாட்டு உருக்கிவிட்டது. வெயிலோ மழையோ... சண்டே உங்க படத்துக்கு காதலர்கள் கூட்டம் அலைமோத போகுது!

No comments:

Post a Comment