'இப்போதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு படம். ஆனால் அதுகுள்ள முடிச்சுட்டு வந்துட்டோம்' என்று முதல் தொலைபேசி அழைப்புக்கே ஆச்சர்யமூட்டினார் அழகர்சாமியின் குதிரை படத்தின் மொத்த வசனக் காட்சிகளையும் 48 நாட்களில் படம் பிடித்துத் திரும்பியிருக்கும் இயக்குநர் சுசீந்திரன். ஆண்டிப்பட்டி பக்கத்துல இருகிற மல்லையாபுரம், தேனி பக்கத்துல இருக்கிற அகமலை இந்த இரண்டு கிராமங்கள் படத்தோட முக்கிய கதைக் களம். இன்னும் சில கிராமங்களிலும் சில காட்சிகள் எடுத்தோம். படத்தில் இடம்பெறும் மூன்று பாடல் காட்சிகள் மட்டும்தான் எஞ்சியிருக்கு என்கிறார். படம் மிக அற்புதமா வந்திருக்கு. படத்தோட நாயகன் அப்பு அழகர்சாமியாவும் அவரோட வாழ்கையில வர்ற சரண்யா மோகன் கல்யாணி கேரக்டர்லயும் இயல்பா வாழ்ந்துட்டு வந்திருக்காங்க. அழகர்சாமியோட குதிரைக்கு அப்புன்னு படத்துல பேர் வச்சிருக்கோம். படப்பிடிப்புல குதிரைய நாங்க அப்புன்னு கூப்பிட்டா கதாநாயகன் அப்பு திரும்பி பார்ப்பான். அப்புறம் குதிரைக்கே அந்த பெயர் பழகிப்போய், கதாநாயகன் அப்புவ நாங்க அப்புனு கூப்பிட அந்தக் குதிரை திரும்பிப் பார்க்கும் என்று ஜனரஞ்சகமாக பேசிய சுசீந்திரன் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கும் திறமையான இயக்குநர்களின் பட்டியலில் சேர்ந்திருக்கிறார். படத்தைப் பத்தி கொஞ்சம் சீரியஸா சொல்லுங்க என்றதும் உண்மையிலேயே சீரியஸ் ஆகி சொல்ல ஆரம்பித்தார். இது என்னோட நண்பர் பாஸ்கர் சக்தி எழுதின அற்புதமான கதைகள்ல ஒண்ணு. "அழகர்சாமியின் குதிரை விகடன்ல வந்தப்போ அதுல இருந்த அங்கதம், நகைச்சுவை, துறுதுறு ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிச்சது. வெண்ணிலா கபடிக் குழுவுக்குப் அப்புறம் இதைத்தான் எடுக்கணும்ன்னு முடிவு பண்ணினேன். ஆனால், நான் மகான் அல்ல என்னை ஒரு கமர்ஷியல் இயக்குநராவும் அடையாளம் காட்டியிருக்கு. அழகர்சாமியின் குதிரைய உலக சினிமா தரத்துக்குக் கொண்டு வர உழைச்சிருக்கோம். மலையாளத்துல இதுமாதிரி படங்கள் அடிக்கடி வரும். இதுல ரசிகர்கள் பார்க்கப் போற பாத்திரங்கள் எல்லாம் நீங்களும் நானும் தினமும் பார்க்கிற சக மனுசங்கதான். அழகர்சாமியோட கிருஷ்ணமூர்த்திங்கிற நாடக நடிகரின் பாத்திரமும் பேசப்படும். சினிமாத்தனம்னு நீங்க தேடினாலும் கிடைக்காது. டிசம்பர்ல ரிலீஸ் பண்ண பிளான் பண்றோம். இந்தப் படத்தோட இன்னொரு முக்கிய பாத்திரமா இளையராஜா சார் இசை இருக்கும். பாடல் காட்சிக்குப் பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். இதுகுறித்து மறுபடியும் பேசுவோம் என்று முடித்துக்கொண்டார். கடைசில யாருதான் 'அப்பு'னு குதிரகிட்ட சொல்லிட்டீகளா?
No comments:
Post a Comment