Friday, November 5, 2010

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (1876 - 1954)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (1876 - 1954)
 
இந்நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர் "கவிமணி" யாவர். நாகர்கோவிலுக்கருகில் உள்ள தேரூரில் தோன்றியவர். முறையாகத் தமிழ் பயின்று தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். இவர்தம் தித்திக்கும் தேன்சுவைக் கவிதைகள் "மலரும் மாலையும்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. உமர்கய்யாமின் பாடல்களைத் தமிழில் சுவைபடப் பாடியுள்ளார். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார். "தாந்தளூர்ச் சாலை" என்ற நூல் பின்னவற்றுள் குறிப்பிடத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடத்தக்கவர். தேசிக விநாயகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 சூலை 27-ம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை- ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.
கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரிய ராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணி புரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக் கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று. தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன. ஓர் அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது.
பாரதியாருக்கு ஆறு ஆண்டுகள் முன்னே பிறந்தவர். பாரதியின் வாழ்வுக் காலம் கவிமணியின் வாழ்வுக் காலத்திற்குள் அடங்குகின்றது. 1882 ஆம் ஆண்டு முதல் 1921 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த பாரதியாரின் கவிதைகள் மக்களிடையே பெற்ற அத்துணைச் செல்வாக்கை கவிமணியின் பாடல்கள் பெற்றதாகத் தெரியவில்லை. இன்றும் இந்நிலைமையே தொடர்கிறது. இதற்குக் காரணம் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுந்த உரிமை வேட்கை பாரதியின் உள்ளத்தைத் தாக்கிக் கனல் கக்கும் தேசியப் பாடல்களை வெளிக் கொணர்ந்தது.
விடுதலை அரசியல் வேண்டி நிற்கும் மக்களின் உணர்வுக்கும் சிந்தனைக்கும் சொல், செயல் வடிவம் கொடுத்தது தமிழ்க்கவிதை வரலாற்றில் பாரதி ஒரு திருப்பு மையமாகவே மாறினார். கவிமணி விடுதலைப் போராட்டம் அல்லாத சமயம், சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். எனினும் அவர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாததாலோ அல்லது புரட்சிக் கனல் கக்கும் விடுதலைப் பாடல்கள் பாடாததாலோ பாரதியைப் போற்றிய அளவுக்குக் கவிமணியை மக்கள் போற்றத் தவறிவிட்டனர்.
"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும். கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் என புகழ்வார் இரசிகமணி டி.கே.சி. "தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை, தினமும் கேட்பது என் செவிப்பெருமை." எனப் புகழ்மொழி சூட்டுவார் நாமக்கல் கவிஞர். "இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துக்களைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.
உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.
என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.
'மலரும் மாலையும்', 'ஆசிய ஜோதி', 'உமர்கய்யாம் பாடல்கள்', 'நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்' ஆகிய நான்கு கவிதைப் படைப்புக்களாலேயே கவிமணி தமிழ்க்கவிதை உலகில் முதன்மை இடம் பெறுகின்றார் 'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலவற்றை இன்னிசை வித்தகர்கள் பலர் மேடைகளில் விரும்பிப் பாடுவது அந்தத் தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம்.
கவிமணியின் சொற்பொழிவுகளும் உரைநடைகளும் 'கவிமணியின் உரை மணிகள்' என நூலுருவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கவிமணியின் சிந்தனைப் பரப்பு எத்தகைய ஆழம் மற்றும் நவீனம் கொண்டது என்பது தெளிவாகிறது.
நாஞ்சில் நாட்டு 'மருமக்கள் வழிமான்மியம்' சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற புரட்சிக்காவியம். தந்தையின் உரிமையும் உடைமையும் தம்மக்களுக்குச் சேராது, தங்கையின் புதல்வனுக்கு உரிமையாகிற புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார் கவிமணி. அதன் விளைவே 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்'!
பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!
- "கவிமணி" யின் (மலரும் மாலையும்)

No comments:

Post a Comment