Wednesday, November 24, 2010

பெண்களும் சட்டமும்

பெண்களும் சட்டமும்

கிராமத்தில் வாழும் ஒரு பெண் கிராம வாழ்க்கை பிடிக்காமல் பட்டணத்திற்குச் சென்றால் சுகமாக வாழலாம் என்ற எண்ணத்தில் பட்டணத்திற்கு புகைவண்டியில் பயணம் செய்கிறாள். பயணம் செய்யும் பொழுது வழியில் யாரோ ஒருவர் அவள் கொண்டு வந்திருந்த பணம் அனைத்தையும் திருடி விட்டார். புகைவண்டி நிலைய காவலர் ஒருவர் பார்க்கின்றார். அந்த பெண்ணைத் தன்னுடன் கூட்டிச் செல்கின்றார். திருமணம் முடித்துக் கொள்வதாகக் கூறுகின்றார். ஆறுதல் வார்த்தைகள் பேசுகின்றார். அந்த பெண்ணும் அவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். குழந்தையும் பிறக்கிறது. அதன் பிறகு பிரச்சனைகள் துவங்குகின்றன. அவன் விட்டுச் செல்கின்றான், அவள் பட்டணத்தில் ஆதரவு கொடுக்க ஆளின்றி துன்புறுகின்றாள். இது ஒரு உண்மை நிகழ்ச்சி. இங்கே இந்த குழந்தை சட்டப் பூர்வமான குழந்தையா? அவர்களது உறவை சட்டப்படி திருமண உறவு என்று ஏற்றுக் கொள்ள இயலுமா? பதில் வேண்டுமா? பதில் வேண்டுமா?
ஏழைக்குடும்பத்தில் பிறந்தவள் இவள். இவள் பெயர் கனகா. இவளுக்கு திருமணம் செய்து வைக்கப் பணம் இல்லையே என்று மிகவும் வருத்தத்துடன் இவளது பெற்றோர் இருக்கின்றனர். அங்கே வருகின்றான் பாலு, வரதட்சனை ஏதும் இன்றி கனகாவை மணந்து கொள்வதாகக் கூறுகின்றான், தான் ஒரு அரசு அலுவலர் என்றும் தெரிவிக்கினற்‘ன். இதை கனகாவின் பெற்றோர் நம்புகின்றனர். எளிய முறையில் திருமணம் நடந்து முடிகின்றது. இருவரும் பாலுவின் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கே பாலு கனகாவை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்துகின்றான். கனகா மறுக்கிறாள், கொடுமைகள் ஆரம்பிக்கின்றன. ஒரு நாள் கனகா மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகிறாள். இவ்வாறான பல வகைப்பட்ட பிரச்சனைகளுக்கு சட்டம் என்ன தீர்வு கூறுகின்றது.
சட்டங்கள் எவ்வாறு தோன்றின?
ஒரு மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம்.
ஏறத்தாழ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதர்கள் குழுக்களாக வாழத் துவங்கினார். பல இலட்சம் ஆண்டுகளாக மந்தை மந்தையாக வாழ்ந்ததில் இருந்து மாறுபட்டு குழு வாழ்க்கை துவங்கியது. ஒரு வழி வந்த உறவினர்கள் ஒரு குழுவாக வாழ்ந்தனர். ஒரே இடத்தில் வாழ்ந்தனர். ஆண்கள் வெளியே வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் சென்றனர். பெண்கள் உணவு வகைகள் தேடிக்கொண்டு வந்தனர். குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்தனர். இவ்வாறு பெண்கள் சிறிது சிறிதாக வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். இவ்வாறு படிப்படியாக துவங்கப்பட்ட பெண் அடிமைத்தனம் நிலைக்க வேண்டாமா? என்ன செய்யலாம்? இங்கே தான் சட்டம் உதவிக்கு வருகின்றது. இந்தப் பெண் அடிமைக் கலாச்சாரத்தைத் தக்க வைக்க ஆண்களால் இயற்றப்பட்ட மதக் கோட்பாடுகளும் சட்டங்களும் பெரிதும் உதவின. "பகை நாட்டு பரி, கரி, தேர், படைக்கலம், ஆடை, குடை, தானியம், பசு, பெண் யாவும் வென்ற நாட்டவனுக்கு உரியன உடையன" என்று மனுநீதி கூறுகின்றது.
ஒரு ஆண்மகனுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள் என்று கிறிஸ்துவ மதம் வலியுறுத்துகிறது. இஸ்லாம் சமயம் வெறும் முகமூடித் துணிக்குள் பெண்களை சிறை செய்து வைத்திருக்கின்றது. சட்டமும், கலாச்சாரமும் நெருங்கிய தொடர்புடையன. ஒன்றோடு ஒன்று. பின்னிப் பிணைந்துள்ளன. எனவே இப்படிப்பட்ட ஒரு பெண்ணடிமைக் கலாச்சாரம்
தலைவிரித்தாடும் ஒரு சமுதாயத்தின் சட்டங்களும் பெண்களுக்குப் பெரிதும் எதிராகவே அமைகின்றன.பெண் சிசுக் கொலை :
"பெண் குழந்தைக் கொலை" என்பது பழங்காலந்தொட்டே, சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெற்று தலைவிரித்தாடும் ஒரு கொடுமையாகும். இன்று வரை அது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது என்பது ஒரு மறுக்க முடியாத யதார்த்தம். வெள்ளையர் ஆதிக்கத்தின் கீழ் நமது நாடு இருந்த காலத்தில் முதன் முதலாக "பெண் குழந்தைக் கொலை தடைச் சட்டம்"
1870-ம் ஆண்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. அது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு 119 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால்....? பெரிதாக என்ன மாற்றத்தைக் கண்டுவிட்டோம்? இன்றும் கிராமப்புறங்களில் இந்தக் கொடுமை பெரிதும் தலை விரித்தாடவில்லையா? இல்லை என்று நாம் நினைத்தால் அது அறிவீனம். நமது செய்தித்தாளைப் புரட்டினால் இன்றும் இச்செய்திகளைக் காணலாம். பெண் குழந்தைக்களுக்கான எமன்கள பல வடிவம் கொண்டு உல்லாச உலா வருகின்றன என்பதே உண்மை. என்னென்ன வடிவங்கள்....எருக்கம்பால், நெல்மணி (உயிரைக் காக்கும் உணவா? அல்லது பறிக்கும் எமனா? ) காப்பித்தூள், உப்பு .....இன்னும் எத்தனையோ? இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை தண்டிப்பதாக இருந்தால் தண்டனை மிகக் குறைவானது தான். இது கொலையல்லவா?.... இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை என்று கருதி ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ விதிக்காமல் இந்த அலட்சியம் ஏன்? சாவதும் அழிவதும் பெண் இனம் தானே?...கருவறை எமன்கள்:
இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் குழந்தைகளைக் கருவிலேயே சமாதி கட்டிவிட பல புதிய கண்டுபிடிப்புகளும் தோன்றிவிட்டன. கருவிலேயே ஒரு குழந்தையின் ஊனங்கள் அறியக் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த அறிவியல் பரிசோதனை இன்று பெண் குழந்தைகளின் கருவிற்கே எமனாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகள் மட்டிலும் 78,000 பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதி ஆகியிருக்கின்றன. இது பம்பாய், டெல்லி, சென்னை போன்ற பெரிய நகரங்களில் பெரும்பான்மையாக நிகழ்கின்றன. நம் நாட்டிலுள்ள மற்ற நகரங்களிலும், கிராமங்களிலும் அதிவேகமாக பரவி வருகின்ற இக்கொடுமையைத் தடுக்க என்ன செய்யப் போகின்றோம்?
1971-ம் ஆண்டு நமது அரசு கருக்கலைப்பை சட்டப் பூர்வம் ஆக்கும் வரையிலும் கருக்கலைப்பு என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஒன்றாகவே இருந்தது.
1971-ம் ஆண்டுச் சட்டம் கீழ்க்கண்ட சில காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யலாம் என்று கூறுகின்றது.
1 கர்ப்பிணிப் பெண்ணின உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றாலோ,
2 பிறக்கும் குழந்தைக்கு உடல், மூளை போன்றவை பாதிக்கப்படும் என்றாலோ,
3 மருத்துவர் சரியென்று எண்ணுகின்ற மற்ற காரணங்களுக்காகவோ, கருச் சிதைவு செய்யலாம்.
இன்று பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்க மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த சட்டத்தையே பயன்படுத்துகின்றனர். கருவுற்றிருக்கும் பெண் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தியும், அவள் கருவுற்றிருப்பதால் கருத்தடை செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் காரணம் காட்டுகின்றனர். இவ்வாறு இன்று பல்லாயிரக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து பெண் விடுதலைக் குழுக்கள் குரலெழுப்பின. இதனைக் கண்ட நமது மத்திய அரசு இக்கொடுமையைத் தடுப்பதற்காக சட்டங்களை அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநில பெண் விடுதலைக் குழுக்கள் தொடர்ந்து போராடியதால் மகாராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில் ஒரு சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆந்திர", அஸ்ஸாம், பீஹார், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், நாகலாந்து, மேற்கு வங்களாம், ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்கள் இதைப் பற்றி கவலைக் கொண்டதாகவே தெரியவில்லை. கர்நாடகம், ஓரிசா, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதைக் கருத்தில் கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வருகின்றது. முடிவெடுப்பது எப்போது? இந்தியா முழுவதும் ஒரே சட்டம் வருவது எப்போது?
மகாராஷ்டிரா மாநில குழந்தைப் பிறப்பின் முன் செய்யும் பரிசோதனைகளை முறைப்படுத்தும் சட்டம் - 1988.
1988-ம் ஆண்டு மே மாதம் 10-ம் நாள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது இந்த சட்டம்.
1 ஏற்கனவே இருக்கின்ற பரிசோதனை முறைகளை முறைப்படுத்துவதோடு நின்று விடுகின்றது.
2 குழந்தைப் பிறப்பதற்கு முன் பரிசோதனை செய்ய சில வரையறைகளைக் கொடுக்கின்றது. எந்த சூழ்நிலையில் ஒரு பெண் இந்தப் பரிசோதனையை மேற் கொள்ளலாம்?
அ.பெண் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால்
ஆ.இதற்கு முன்பு 2 அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால்
இ.ஆபத்து விளைவிக்ககூடிய மருந்து உட்கொண்டிருந்தால் அல்லது அபாயகரமான கதிர்கள் ஊடுருவக் கூடிய தொழிற்சாலைகளில் வேலை செய்தால்.
ஈ.பாராம்பரிய நோய்களினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினராக இருந்தால் இந்தப் பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்தலாம்.
3 ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட தனியார் பரிசோதனை கூடங்களை ஒழித்துக் கட்டாமல் அவற்றை முறைப்படுத்துகின்றது. அவை அனைத்தையும் பதிவு செய்து கொள்ள வழிவகுத்துக் கொடுக்கின்றது.
4 இதைக் கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்துகின்றது.
5 இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பெண்ணையும் (சமுதாய கட்டுப்பாடு அழுத்தம் இவற்றால் பரிசோதனையை செய்பவள்) மற்ற குற்றவாளிகளையும் கணவர், மாமியார், (பெண்ணைப் பரிசோதனையைச் செய்யக் கட்டாயப்படுத்துபவர்கள்), டாக்டர்கள், பரிசோதனைக் கூடத்தை நடத்துபவர்கள் போன்றவர்களையும் ஒரே மாதிரியாகப் பார்க்கின்றது; தண்டனைக் கொடுக்கின்றது. இதில் பெண் என்பவர் சமூக, குடும்ப, கலாச்சாரக் கட்டுப்பாடுகளினால் உருவான கட்டாயத்தின் பேரில் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்துபவள்; அவளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதென்பது எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய ஒன்றாகும்.
6 இந்த சட்டத்தின் கீழ் புரியும் குற்றம் பிணையில் விட முடியாத சமரசம் செய்ய முடியாத பிடி ஆணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாகும்.
இவ்வாறு ஆங்காங்கே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் விருப்பத்திற்கேற்ப பல ஓட்டைகளுடன் வெவ்வேறு சட்டங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே சட்டத்தைக் கொண்டு வருமாறு பெண்களும், சமூக நல விரும்பிகளும் இணைந்து குரலெப்பினால் நல்லது. இந்திய தண்டனைச் சட்டம் - 1860 பெண்கள் தொடர்பான பிரிவுகள் இந்த சட்டப்பிரிவுகள் அனைத்தையும் நோக்கினால் பெண், ஆண் என்பவரின் உடைமை, சொத்து என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன என்பது தெள்ள தெளிவாக விளங்கும்.
--------------------------------------------------------------------------------
ஆபாசப் புத்தகம், விளம்பரம்
பிரிவுகள் 292, 292 ஏ, 293, 294 என்ன சொல்கின்றன?
ஆபாசமான புத்தகம், விளக்கம், படம், ஒவியம், பொருள், விற்பது, உற்பத்தி செய்வது இவற்றை தடை செய்கின்றன. ஆபாச விளம்பரம் செய்வதை தடை செய்கிறது. ஆபாச செயல்கள், பாடல்கள், இவற்றை தடை செய்கிறது.
தண்டனை என்ன தெரியுமா?
பிரிவு 292 இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு 292ஏ குறைந்த அளவு தண்டனை ஆறு மாதச் சிறைக்காவல் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேற்படாமல் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு 293 ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்
பிரிவு 294 மூன்று மாதங்கள் வரை சிறைக்காவல் அபராதம் அல்லது இரண்டும்.
1925-ம் ஆண்டு நமது அரசு ஆபாச விளம்பரங்களை தடை செய்து விரிவாக ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்தது.
இன்று ஆபாச விளம்பரங்கள் இல்லையா? பாடல்கள் இல்லையா? செய்கைகள் இல்லையா? பெண்ணை அலங்காரச் சின்னமாகவும், போகப் பொருள்களாகவும் பார்த்தே பழகிவிட்ட இந்த கலாச்சார அமைப்பிலே சட்டங்கள் பெரிதாக என்ன செய்து விடும்
--------------------------------------------------------------------------------
பெண்ணை அவமதித்தல்
பிரிவு 354 :ஒரு பெண்ணுடைய கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்க வேண்டும் என்றக் கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும்.
தண்டனை: இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
--------------------------------------------------------------------------------
கட்டாயத் திருமணம்
பிரிவு 366: ஒரு பெண்ணைப் பலாத்காரமாக வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படி அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகத் திருமணம் செய்து வைக்கப்படும் என்று தெரிந்திருந்தும், கவர்ந்து செல்வது, அல்லது கடத்திச் செல்வது குற்றமாகும்.
தண்டனை: பத்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும்.
பிரிவு 366ஏ: பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை, பிறருடன் கட்டாயப் புணர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய புணர்ச்சிக்கு அந்தப் பெண் உட்படுத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தும், அவளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும்படி எந்த வகையில் தூண்டினாலும் குற்றமாகும்.
தண்டனை: பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும்.
--------------------------------------------------------------------------------
விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல்
பிரிவு 373 : பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை, எந்த வயதிலாவது விபச்சாரத்துக்கு அல்லது முறைகேடான புணர்ச்சி அல்லது வேறு சட்ட விரோத அல்லது ஒழுக்கக்கேடான செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய நிலைக்கு பலியாகலாம் என்று தெரிந்திருந்தும், அந்த நபரை வாங்குவதும், வாடகைக்குப் பெறுவதும் அல்லது வேறு எந்த வகையிலாவது தன் வசம் கொண்டு வந்து வைத்திருப்பதும் குற்றமாகும்.
தண்டனை : பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும். இன்று இந்தியாவில் கணக்கெடுத்துப் பார்த்தால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களில் 20% குழந்தைகள். இந்த சட்டங்கள் இருந்தும் இந்நிலைக்கு என்ன பதில் சொல்ல?
ஹசினா என்ற 9 வயது சிறுமி, பெங்களூர் நகரத்தின் ஒரு சுமாரான குடும்பத்தைச் சார்ந்தவள்: தந்தையைச் சமீபத்தில் இழந்து விட்டாள். அவளுடைய உறவினர் ஒருவர் அவளுக்கு வீட்டு வேலை ஒன்று வாங்கி தருவதாக வாக்களித்து பம்பாய்க்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே ஹசினாவை காமத்திபுரா (பம்பாயில் அதிகமாக விபச்சாரம் நடக்கின்ற இடம்) என்ற இடத்தில் விற்று விட்டார். இங்கே இந்த 9 வயது இளஞ்சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டாள்: பல இரவுகள் தொடர்ந்து இவ்வாறான கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாள். அவள் இந்தத் தொழிலை முற்றிலுமாக வெறுத்தாள். ஆனால் இதிலிருந்து தப்பித்துச் செல்வதற்குத் தான் வழி தெரியவில்லை. மெதுவாக அவள் போதைப் பொருட்களை எடுக்கும் பழக்கத்திற்கு உட்படுத்தப்பட்டாள். இன்று அவள் போதை மருந்தை வாங்குவதற்காகப் பணம் ஈட்ட எதையும் செய்யத் தயார் என்ற நிலைக்கு ஆளாகி விட்டாள். இவ்வாறு இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகளோ?
--------------------------------------------------------------------------------
பலாத்காரம் (வன்முறைப்புணர்ச்சி)
பலாத்காரம் என்றால் என்ன?
பிரிவு 375: ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கீழ்க்கண்ட 6 சூழ்நிலைகளில் உடல் புணர்ச்சிக் கொண்டால் பலாத்காரம் ஆகும்.
1 அவளுடைய விருப்பத்திற்கு மாறாக
2 அவளுடைய சம்மதமின்றி
3 அவருக்கு அல்லது அவளுக்க நெருக்கமான ஒருவருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்கப்படம் என்ற அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தைப் பெற்று.
4 அவளுடைய சம்மதத்துடன் அந்த ஆள் தான் முழுமையாக அவளுடைய கணவன் இல்லையென்று தெரிந்த போதிலும் அந்தப் பெண்தான் அவளுடைய சட்டப்பூர்வமான மனைவி என்று நம்பியிருக்கும் போது.
5 அவளுடைய சம்மதத்துடன் - அந்த சம்மதம் புத்தி சுவாதீனம் இல்லாமல் குடிபோதையில் இருக்கும் போது பெறப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளில் அவளுடைய சம்மதத்தின் தன்மையையோ, விளைவுகளையோ அவளுக்கு புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கும் பொழுது.
6 இவளுடைய சம்மதம் இருந்தும் அவள் 16 வயதிற்கு கீழ் இருக்கக்கூடிய ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில்.
மதுரா வழக்கு மதுரா என்ற 15 வயது பெண் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு காவல் நிலையத்தில் இரு காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டாள். இந்தக் குற்றவாளிக் காவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் கீழ்கண்ட காரணங்களுக்காக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த பெண் எதிர்த்துப் போராடியதற்கான எந்த ஒரு அடையாளமும் அவளது உடலில் இல்லை .
அவள் உதவிக்கு யாரையும் கூச்சலிட்டு அழைக்கவில்லை .
ஏற்கனவே இவள் காதலுடன் உடல் புணர்ச்சிக் கொண்டிருக்கிறாள்
இதனைக் கேள்விக் கேட்டு எதிர்த்து பல பெண் விடுதலை இயக்கங்கள் குரல் எழுப்பின. போராடின இதன் விளைவாக 1983-ல் இந்தப் பிரிவில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த பிரிவு 376 சொல்கின்றது.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள நபர்களல்லாத பிறர் செய்யும் பலாக்காரத்திற்கு குறைந்த பட்சம் 7 வருடம் முதல் ஆயுட்காலம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
1. போலீஸ் அதிகாரி தன் எல்லைக்குள் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
2. சிறை, மருத்துவமனையில் உள்ள பெண்ணை அங்குள்ள ஆண் ஊழியர்கள் பலாத்காரம் செய்தல்.
3 பெண்கள் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் பணி செய்யும் அரசு அதிகாரி தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கு உள்ள பெண்ணை பலாத்காரம் செய்தல்.
4 கற்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
5 12 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணைப் பலாத்காரம் செய்தல்.
6 குழுவாக சேர்ந்து பலாத்காரம் செய்தல்.
இக்குற்றங்களுக்கு குறைந்த பட்சம் 10 வருடம் முதல் ஆயுட்காலம் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
இதை நாம் ஆழமாக சிந்தித்தால், விவாதித்தால் இது எந்த விதத்திலும் ஒரு பெண்ணின் உடலுக்கு எதிரான வன்முறை என்று கருதுவதே இல்லை என்பது புரியும். சமுதாயம் இதை ஆண்களின் கௌரவத்தைப் பாதிக்கும் ஒரு குற்றமாகவே பார்க்கின்றது.
--------------------------------------------------------------------------------
பிறர் மனை சேர்க்கை
பிரிவு 497 பிறருடைய மனைவியுடன் அவளுடைய கணவன் அனுமதி இல்லாது அவளுடன் உடல் புணர்ச்சி செய்வது"பிறர் மனை சேர்க்கை" என்ற குற்றமாகும்.
முக்கிய அம்சங்கள்
1 கணவனுடைய அனுமதி இருக்கக் கூடாது.
2 இதன் கீழ் குற்றம் செய்யும் ஆண் மகன் மட்டும் தான் தண்டனைக்கு உள்ளாவான். பெண்ணை தண்டிக்க இயலாது.
3 பெண்ணின் கணவன் தான் புகார் செய்ய வேண்டும். இதில் நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் - கணவனுடைய அனுமதியோடு ஒத்துழைப்போடு மனைவி பிற ஆணுடன் உடல் புணர்ச்சி கொண்டால் அதை என்ன செய்வது? இவ்வாறு தானே பல ஆண்கள் திருமணம் என்ற பெயரில் "பெண்ணை" மணந்து கொண்டு விபச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மனைவிக்கு வயதானவுடன், இளமை போனவுடன் அழகு குறைந்தவுடன், இனிமேல் தொழிலுக்கு உதவாதவள் என்று கருதும் பொழுது என் அனுமதியின்றி இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டிருக்கிறாள் என்று கூறி அடித்துத் துரத்துகின்றனர். இதற்கெல்லாம் வழி வகுக்கின்றதே இச்சட்டங்கள்.பல பேரரசுகள், சாம்ராஜ்யங்கள் பெண்ணால் அழிந்தன என்று வரலாறு கூறுகின்றது. அவை பெண்ணால் அழிந்தனவா? அல்லது பெண்கள் மீது ஆண்கள் கொண்ட உடைமை உணர்வால் அழிந்தனவா? அதே உடைமை உணர்வு நமது சட்டங்களிலும் வெளிப்படையாகத் தெரிகின்றது.இந்த சட்டப் பிரிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண்ணுரிமை இயக்கம் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியைத் தழுவினாலும் மக்களிடையே பலவிதமான விவாதங்களை எழுப்பியுள்ளது.
தண்டனை : ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்

No comments:

Post a Comment