Wednesday, November 24, 2010

பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள்...

பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள்...

ந.ஜ“வா -Self Defense for Women - Child Care Tips and Informations in Tamil
என்னதான் பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போய் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதித்தாலும் அவர்கள் ஆண்களைப் போல சுதந்திரமாக நடமாட முடிவதில்லை.
"வீட்டை விட்டு வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ வெளியே செல்லும் பெண்ணாகட்டும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்ணாகட்டும் அவர்களுக்கு ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஏற்படலாம். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எப்போதும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்கிறார் பெண்களுக்கான தற்பாதுகாப்புப் பயிற்சிகளை அளித்துவரும் தருணா. "பெராடிகம்ஷிப்ட்" என்ற நிறுவனத்தின் இயக்குநரான அவரை சந்தித்தபோது...
"பெண்ணாகப் பிறந்துவிட்டாலே இந்த உலகில் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுதல், ஈவ் டீசிங் செய்யப்படுதல் என்று எந்தப் பெண்ணுக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் நான் சந்திக்கிற பல கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் பலரும் "எங்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது" என்ற நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த ஆபத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
இப்படி இருப்பதனால் அவர்களுக்கு உண்மையிலேயே ஆபத்து நேரக்கூடிய சந்தர்ப்பங்களில் எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சியால் உறைந்து போகிறார்கள்.
இந்த நிலையை மாற்ற பெண்கள் எப்போதும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஆபத்துகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
இதற்கான பயிற்சிகளைத்தான் நாங்கள் பெண்களுக்கு கற்றுத் தருகிறோம்.
நாங்கள் நடத்தும் பயிற்சி கராத்தேவோ, குங்க்ஃபூவோ அல்ல. ஆண்களால் பெண்களுக்குத் தாக்குதல் ஏற்படும் போது அதை அவர்கள் எவ்விதம் எதிர்கொள்வது என்பதற்கான மனரீதியான, உடல்ரீதியான பயிற்சிகளையே அளிக்கிறோம்.
பெண்கள் பாதுகாப்பாக இருக்க யோசனைகள் சொல்கிறோம்.
முதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நூலகங்கள் மிகப் பெரியவையாக அதிக ஆள் நடமாட்டம் இல்லாததாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் பெண்கள் தனியாகப் போகக் கூடாது. அதுபோல அலுவலகத்திலும் கூட தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஷாப்பிங் போகும் போது இருசக்கர வாகனத்தை, காரை ரொம்ப தூரமான இடத்தில் நிறுத்திவைத்துவிட்டுச் செல்லக் கூடாது. ஷாப்பிங் முடித்து விட்டு வர நேரமாகிவிட்டால் தனியாகச் சிறிது தூரம் நடந்து சென்று வாகனத்தை எடுக்க வேண்டும். அப்போது எது வேண்டுமானாலும் நிகழலாம்.
பொது இடங்களில், பார்ட்டிகளில் பெண்கள் தாங்கள் குடிக்க இருக்கிற குளிர்பானத்தை உடனே குடித்துவிட வேண்டும். மேஜையில் வைத்துவிட்டுச் சற்று எழுந்து போனால்கூட அதில் மயக்க மருந்தோ, வேறு எதையோ பிறர் கலந்து வைத்துவிட வாய்ப்புண்டு.
இப்போது கால்சென்டர், பிபிஓ போன்றவற்றுக்கு பெண்கள் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. நள்ளிரவில் கூட நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அல்லது அலுவலகத்தில் வேலை முடிந்து நேரம் கழித்து வீட்டிற்கு வர வேண்டியிருக்கிறது.
அப்போது காரில் ஏறும் முன்பு பெண்கள் டிரைவரை முதலில் கவனிக்க வேண்டும். அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக் கூடாது. அந்த ஆள் காரில் இருந்தால் நான் காரில் வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட வேண்டும்.
காரில் ஏறி உட்கார்ந்தவுடன் செல்போனைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பிக்கக் கூடாது. இடையில் யார் காரில் ஏறுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். கார் செல்லும் பாதையை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுபாதையில் கார் செல்லுமானால் அதை உரிய நேரத்தில் போன் மூலம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். காரில் செல்லும் போது தூங்கக் கூடாது.
பஸ்ஸில் போகும் போது ஆண்களின் பால்ரீதியான தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. இதைச் சண்டை போடாமல் சமயோசிதமாகச் சமாளிக்க முடியும். உதாரணமாக பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆண் தொந்தரவு கொடுக்கும் போது வாந்தி வருவது போல நடித்தால் அந்த ஆண் தள்ளி உட்கார்ந்து கொள்வான்.
இப்படி சமயோசிதமாக நடந்து கொள்வதற்கு முக்கியத் தேவை, எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். அடுத்து உணர்ச்சிவசப்படாமல் நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற அறிவு.
பெண், ஆணின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தப்பிக்கும்போது ஆணைத் தாக்க வேண்டிய தேவையிருந்தால் நிச்சயமாகத் தாக்க வேண்டும்.
பின்னாலிருந்து பிடிக்கும் ஆணின் முன்பாதத்தில் ஓங்கி மிதிக்க வலி தாங்கமாட்டாமல் அவன் பிடியை விட்டுவிடுவான். காலால் அவனின் முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியில் ஓங்கி உதைத்தாலும் விட்டுவிடுவான்.
அதுபோல பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆணிடம் இருந்து தப்பிக்க அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு சிறிது தூரம் முன்னோக்கி ஓடி பின் சட்டென்று திரும்பி அவனைத் தாக்க வேண்டும்.
ஆணை விட பெண்கள் உடல்ரீதியில் வலிமை குறைந்தவர்கள் தான் என்றாலும் எளிதில் தாக்கும் முறைகளை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆண்களின் உடலில் சில பகுதிகள் மிக மென்மையானவை. அந்தப் பகுதிகளில் தாக்கினால் அவன் விட்டுவிடுவான். உதாரணமாகப் பின்னாலிருந்து பிடிக்கும் ஆணை ஒரு பெண் தனது முழங்கையால் அவனுடைய விலா எலும்பில் ஓங்கி இடித்தால் அவன் நிலை குலைந்து விடுவான். மார்புக்குக் கீழே, வயிற்றுக்கு மேலே உள்ள மையமான பகுதியில் இடித்தாலும் அவனால் தாங்க முடியாது. தொண்டைக் குழிக்கு அருகில், நெற்றிப் பொட்டில், இடுப்புக்குக் கீழே எல்லாம் தாக்கினால் ஆண் எழுந்து கொள்ளவே முடியாது.
இந்தத் தற்காப்புத் தாக்குதலையெல்லாம் நினைத்த மாத்திரத்தில் பெண்களால் செய்ய முடியாது. அதற்கு ஓரளவுக்குப் பயிற்சி தேவை. அதை நாங்கள் தருகிறோம்.
இந்தப் பயிற்சிகளில் பெண்கள் தங்களுடைய கால்களை, கைகளை வலுப்படுத்திக் கொள்ளச் சொல்லித் தருகிறோம். தினமும் அந்தப் பயிற்சிகளைச் செய்தால் போதுமானது.
ஓர் ஆண் தன்னைத் தாக்கும் போது எப்படி அவனைத் திருப்பித் தாக்க வேண்டும் என்பதற்குக் கற்பனையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளைக் கணவரையோ, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி போன்றவர்களின் உதவியுடன் வீட்டிலேயே தினமும் செய்யலாம். இதனால் உண்மையிலேயே தாக்குதல் வரும் சந்தர்ப்பங்களில் திருப்பித் தாக்குவது எளிதாக இருக்கும். வேகமாக ஓடுவதற்கும், பல தடைகளைக் கடந்து தாண்டிக் குதித்து ஓடுவதற்கும் பயிற்சி எடுக்க வேண்டும். இதையெல்லாம் நாங்கள் எங்கள் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறோம்.
ஓர் இடத்திற்குப் போகும் போது அந்த இடத்தில் ஆணால் தனக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தோன்றினால் அந்த இடத்தில் உள்ள பொருட்களை வைத்து அவனை எப்படித் தாக்கலாம், எப்படித் தப்பிக்கலாம் என்பதை முதலில் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது மனக்கண்ணில் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒருவேளை நிஜமாகவே தாக்குதல் நிகழும் போது தப்பிப்பது எளிதாக இருக்கும். உதாரணமாக ஹோட்டலில் உட்கார்ந்திருக்கும் போது ஓர் ஆண் கெட்ட நோக்கத்துடன் தன்னை நெருங்கி வந்தால் சூடான காபியை அவன் முகத்தில் ஊற்றி அவனை நிலைகுலையச் செய்து தப்பித்துவிடலாம்.
பெண்கள் தங்கள் கைப்பையில் ஒரு விசிலை வைத்துக் கொள்ள வேண்டும். ஆணின் தாக்குதல் நிகழும்போது அந்த விசிலால் ஒலியெழுப்பினால் அக்கம்பக்கம் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். ஏனெனில் உரத்த குரலில் கத்துவது எல்லாருக்கும் முடியாது. இப்போது பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்புப் பொருட்கள் வந்துவிட்டன. அவற்றையும் பயன்படுத்தலாம்.
கூட்டமுள்ள பகுதிகளில் பெண்கள் நடந்து செல்லும்போது கையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது. கைகளைக் கட்டிக் கொண்டு நடந்தால் பின்புறம் இருந்து பிடிப்பவரையோ, அருகே வந்து இடிப்பவரையோ முழங்கையால் தாக்க முடியும்.
துப்பட்டாவின் நுனிகள் முதுகுப்புறம் வரும்படி போட்டால் பின்புறமிருந்து துப்பட்டாவை இழுப்பார்கள். அப்போது நமது உடைகள் கிழிந்து விடும். கழுத்து நெரிபடும். முன்புறம் போட்டால் இந்தப் பிரச்சினையில்லை.
பெண்களைத் தாக்க வருகிறவர்கள் திட்டம்போட்டுத்தான் தாக்க வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்கவும், திருப்பித் தாக்கவும் பயிற்சி தேவை. அத்தகைய பயிற்சிகளைத்தான் நாங்கள் அளித்து வருகிறோம்."

No comments:

Post a Comment