Friday, January 14, 2011

பொங்கல் ஸ்பெஷல்: கரும்பின் பயன்பாடுகள் என்னென்ன

பொங்கல் ஸ்பெஷல்: கரும்பின் பயன்பாடுகள் என்னென்ன?

Pongal Special: Sugar cane in Siddha Medicine and its uses - Food Habits and Nutrition Guide in Tamil
'கரும்பு' தாவரவியலுள் இது ஒரு வகையான புல் எனப்படும். தொல்காப்பியமும் இதனைப் 'புல்' எனக் கூறுகிறது.
தொன்றுதொட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் கரும்பு, அதியமானின் முன்னோரால் அவர் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது என்று ஒளவையார் கூறுவர். உலகிற்கு சுவையான சர்க்கரை கரும்புச் சாறிலிருந்து பெறப்படுகின்றது. கரும்புக்குப் பிற்காலத்தில் வேழம், கன்னல், கழை எனவும் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. கரும்புக்கு நீர் மிகுதியாக வேண்டப்படும். அதனால் நீர்ப்பிடிப்பான வயல்களில் பயிரிடப்படுகிறது. இதில் பல கணுக்கள் காணப்படும். கரும்பின் பிறப்பினையும், அதன் மகத்துவத்தையும் கீழே காண்போம்.
சங்க இலக்கியப் பெயராக இவை 'கரும்பு' என்றே அழைக்கப்படுகின்றது. அந்தரத்து பெறுதற்குறிய "அமிர்தம் போன்ற கரும்பை இங்கு தந்தவனுடைய வழித்தோன்றலே" என்று பாடல் தொடங்குவதை சுட்டிக்காட்டி கரும்பு தொன்று தொட்டு தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. இது முதன் முதலாக தென் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கக்கூடும் என்றும் தாவரவியல் அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளனர்.
மெல்லிய வெண்மை நிறமான மணமற்ற இதன் பூக்களை ஆண் குருவி தனது இணையின் எதிர்கால நலனுக்கு, கூடு கட்டும் பொருட்டு எடுத்துச் செல்லும் எனவும் பாடியுள்ளனர் புலவர்கள்.
இனிய சுவைச்சாற்றால் உலகத்திற்கே இனிப்பை வழங்கும் பெருமை கொண்ட இத்தாவரம் இந்தியாவிலும், சீனாவிலும் பயிரிடப்படுகிறது.
கரும்பிலிருந்து சாறு பிழிந்து எஞ்சிய சக்கை, காகிதம் செய்வதற்குப் பயன்படும். இதன் இலைகள் மக்கிப் போய் நல்ல எருவாகவும் விளங்குவதாக இலக்கிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சித்த வைத்தியத்தில் கரும்பின் வேறு பெயர்களாக புனர்பூசம், இக்கு, வேய் என அழைக்கப்படுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் பயனாகிறது. இவை இனிப்புச் சுவையுடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது.
கரும்புச்சாறு:
இதன் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும். மிதமாக சாப்பிட்டால் வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
செங்கரும்பின் சாறு:
இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது.
நல்ல வெல்லம்:
இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும்.
பழுப்புச் சர்க்கரை:
கரும்பின் சாற்றைக் காய்ச்சி சர்க்கரை செய்யப்படுகிறது. இது மருந்துகளுக்குத் தேவையாயுள்ளது. வாந்தி, பித்தம், சுவையற்றத் தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைத்து சுகம் தருகிறது.
சீனிச் சர்க்கரை:
இது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.
கற்கண்டு:
சர்க்கரையைக் கொண்டு கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் பல்லரணை, (ஈறு தடிப்பு) இருமல், வாந்தி ஆகியவை தீரும்.
சாறு:
மிகவும் இனிப்பாக இருக்கும். விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம்.
சர்க்கரை:
சர்க்கரையைப் பாகு செய்து உணவுப் பொருட்களை நெடுநாள் சேமித்து வைக்கலாம். ஜலதோஷம், நீர்ப்பீனிச நோய்களைப் போக்கவும் தரலாம்.
செம்பு, வெள்ளப் பாஷாணம் முதலிய விஷப்பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து சர்க்கரை மிகச் சிறப்பான விஷமுறிப்பாக செயல்படுகிறது. ஆறாத புண்களையும் குணமாக்க வழங்கப்படுகிறது.
மஞ்சள் பெழுகும், சர்க்கரையும் சேர்த்து குழம்பாக்கி பருக்களின் மீது தடவி வந்தால் குணமாகிறது. கண்களில் தூசு, வலி, இரணம், நோய் ஆகியவற்றிற்கு சர்க்கரை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்­ர் சேர்த்து கரைத்து ஒரு மணி நேரத்துக்கு 2 சொட்டு கண்களில் விட்டுவந்தால் நோயின் தாக்கம் குறையும்.
மேலும் இவற்றிற்கு, இரவில் கண் இமைகளுக்கு சிற்றாமணக்கு நெய், ஓரங்களில் தேய்த்து, கண் இமை ஒட்டிக் கொள்ளாதபடி செய்வதுடன், காலையில் வெதுவெதுப்பான பாலும், நீரும் சேர்த்து கண்களைக் கழுவி வரவேண்டும்.
நெடுநாள் நோயாளிகளாக உள்ளவர்களின் படுக்கை அறையில் சர்க்கரையைப் போட்டு புகையை ஏற்படுத்தினால் சுத்தமான காற்று ஏற்பட்டு அறை சுத்தமாகும்.
சர்க்கரையானது நாற்றத்தை விலக்குகிறது. அழுகுவதைத் தடுக்கிறது. அதிகளவில் உட்கொண்டால் உடல் மென்மைப்படும். சிவப்புச் சர்க்கரை இலேசான வயிற்றுப் போக்கை உண்டாக்கும். வயிற்றுக்குச் சக்தியை அளிக்கும். வேக்காட்டை உண்டாக்கும். காயங்களில் தூவினால் அவை குளிர்ச்சியடைகின்றன. அழுக்கைப் போக்கும். எளிதில் செரிமானமாகாது.
மருந்து, லேகியங்களில் பூசணம் பூத்து விடமாலிருக்கவும், அதன் சுவை கெடாமல் இருக்கவும், சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளவும் சர்க்கரையை அதிகளவில் பயன்படுத்துவர். லேகியங்கள், முரப்பாக்கள், சர்பத்துக்கள் இவை சர்க்கரைப்பாகு கொண்டுத் தயாரிக்கப்படுகின்றன.
ஊறவைத்த மருந்துகளில் சர்க்கரையைக் கலந்து இன்சுவையுண்டாக்கிப் பருகக் கொடுப்பர். எளிய மலபந்தத்தை நீக்க சிவப்புச் சர்க்கரையைப் பாலில் கலந்து பருக வைப்பர். உணவு செரிமானமாக, உணவு உண்ட பிறகு சிறிதளவு சர்க்கரையை உண்பர். சாக்கரையை உணவில் அதிகம் பயன்படுத்தினால் சோம்பல் ஏற்படும். பருமனானவர்க்கு அதிக இரத்த உற்பத்தியில் உடல் சிவக்கும்.
காடி:
கருப்பஞ்சாற்றைப் புளிக்க வைத்தது காடி என அழைப்பர். இது பசியை உண்டாக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும். தாகத்தைக் குறைக்கும். காடி ஒரு பங்கும், சுத்தமான நீர் 5 பங்கும் கலந்து ஈயம் போன்ற விஷங்களால் ஏற்படும் நோய்களுக்குத் தரலாம். இதற்கு முன்பு பேதிக்கு கொடுத்து அதன்பின் கையாள்வது நல்லது.
தலைவலி, மயக்கம், தொண்டைப் புண், மூக்கில் நீர் ஒழுகல், ஆகியவற்றிற்கு இதன் ஆவியை நுகர வைத்தால் குணமேற்படும்.
சிறுநீரில் இரத்தம் வெளியேறும் நோய்க்கு, காடியை தொடை, இடுக்கு ஆகிய இடங்களில் பூசினால் குணமாகும்.
தேள், குளவி, தேனீ போன்றவை கொட்டினாலும், சில பயிர் பொருட்களின் உராய்வலால் ஏற்படும் தினவு, நமைச்சல் நோய்களுக்குப் பூசலாம். இதனைப் போன்றே மார்பக வீக்கத்தையும் கரைக்கலாம்.
ஆண், பெண் இணைப்பால் இரவில் உண்டாகும் மிகு வியர்வைக்கு கருப்பங்காடியை ஒரு பங்கு அளவும், நீர் இரண்டு பங்கு அளவும் கலந்து மார்பில் பூசி வந்தால் வியர்வை குறையும்.
வேர்:
கரும்பின் வேரை முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.
கரும்பை சரிபாதியாகப் பிளந்து திப்பிலிப் பொடி, ஏலக்காய்ப் பொடி இவற்றை நடுவாக வைத்து செம்மண் சீலையால் கட்டி கும்பி நெருப்பிலிட்டு பதமாகச் சுட்டு, பின்னர் சீலையை எடுத்து பின் பிழிந்து எடுத்த சாற்றினை விக்கலுக்குக் கொடுத்து வந்தால் தீரும். இதனைப் பல துண்டுகளாக வெட்டி, சுத்திகரிக்கப்பட்ட செம்புத் தூளை சட்டியிலிட்டு வறுத்து வெட்டிய துண்டுகளால் கடைந்தால் ஒருவகை பஸ்பம் உண்டாகும்.
இதனைச் செய்ய ஒரு பலம் செம்புத் தூளுக்கு 4 கரும்புகள் கூட தேவையாகும். இதனைக் கொண்டு பல நோய்களைத் தக்க இணை மருந்துகளால் தீர்க்கலாம்.

No comments:

Post a Comment