Friday, November 12, 2010

பெண்மையை போற்றுவோம்

பெண்மையை போற்றுவோம்

டாக்டர். ஜமுனா ஸ்ரீனிவாசன் Give equal rights to woman - Food Habits and Nutrition Guide in Tamil
பெண்களுக்குத் தரவேண்டிய முறையான மதிப்பைக் கொடுத்த எல்லா நாடுகளும் மகத்தான நிலையை அடைந்துள்ளன. எந்த நாடு. எந்த மக்கள் பெண்களை மதிக்கவில்லையே அவை எந்தக் காலத்திலும் சிறந்த நிலையை அடைந்ததில்லை. அடையவும் முடியாது.
எந்த நாட்டில் குடும்பத்தில் பெண்களுக்கு மேன்மையான இடம் இல்லையோ, எங்கே பெண்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை - சுவாமி விவேகானந்தர்.
நமது நாட்டில் ஆணுக்குத் தரப்படுகின்ற உரிமையில் குறைந்தபட்ச அளவுகூட பெண்களுக்குத் தரப்படுவதில்லை. கிராமப்புறங்களில் பிறக்கும் பெண் குழந்தைகள்தான் தங்கள் வாழ்க்கைக் காலம் முழுதுமே கொடுமைப் படுத்தப்படுகின்றனர்.
இந்தக் கொடுமைகள் அந்தப் பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்தே தொடங்கி விடுகிறது. இவற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவது என்பது கடினத்திலும் கடினமாய் உள்ளது.
நகர்ப்புறங்களில் ஆணுக்குச் சமமாகக் கல்வி வேலை வாய்ப்பில் இடம் பெற்றாலும் உரிமையிலும் முடிவெடுப்பதிலும் இன்றும் கூட அவர்கள் ஆணாதிக்கத்தின் கீழ் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். மணமான பின் கணவர் என்ற ஆணுக்கும் கட்டுப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
ஆண் குழந்தைகளோடு ஒப்பிடும் போது பெண் குழந்தைகளுக்கு உணவுகூட சரிவரக் கிடைப்பதில்லை. இவை மட்டுமின்றி பெண் குழந்தைகள் கல்விச்சாலைக்கு செல்வது கூட மறுக்கப்படுகிறது. படிப்பைப் பாதியில் நிறுத்த வைப்பதும் பெண்களுக்குத்தான்.
இன்று தமிழகத்தில் 19 சதவிகிதப் பெண் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிக்கு மேலே படிப்பைத் தொடராமல் நிறுத்தப்படுகின்றனர். சமுதாயத்தில் பெண்குழந்தை பிறப்பு என்பது விரும்பத்தகாத துக்ககரமான ஒன்றாகவும் ஆண் குழந்தை பிறப்போ கொண்டாடத்தக்க மகிழ்ச்சிகரமான ஒன்றாகவும் இருண்ட மனம் கொண்டோரின் குருட்டு எண்ணமாக இருந்து வருகிறது.
பெண்கள் பண்டைக்காலம் முதல் பாவத்தின் பிறப்பிடமாகவே கருதப்பட்டு வந்துள்ளனர். பெண் குழந்தை பிறப்பது முன் செய்த பாவத்தின் பலன் என்றும் பெண் குழந்தை வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய சுமை என்றும் கருதி பிற்போக்குத்தனமான எண்ணங்களால் உந்தப்பட்டு பெண் சிசுக்களை அழிக்கும் கொடிய பழக்கம் ஏற்பட்டுவிட்டது
ஆண் மேலாண்மை ஆண் சந்ததியை வேண்டி நிற்கும் மனநிலை, வயதானபோது ஆண்பிள்ளை பாதுகாப்பான் என்ற அசட்டு நம்பிக்கை போன்றவை பெண் குழந்தைகளைப் புறக்கணிக்கத் தூண்டுகின்றன.
மிகவும் வறுமை நிலையிலிருக்கும் பல கிராம மக்களிடம் பெண் குழந்தைகள் என்றாலே பயம். நாம் பெண் பிள்ளையாகப் பிறந்து இந்த அளவுக்கு வரும் வரை நாமும் நம் பெற்றோரும் உடன்பிறந்தோரும் பட்ட பாடே போதும். மீண்டும் அப்படி வரவேண்டாம் என்று வெறுக்கிறார்கள்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகும் கௌரவ இழுக்கிற்குப் பயந்து, தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளுக்குத் தாங்களே சமாதி கட்டி விடுகிறார்கள்.
தாயாக ஒரு பெண் வேண்டும். தாரமாக ஒரு பெண் வேண்டும். தங்கையாகக்கூட ஒரு பெண் வேண்டும். ஆனால் தங்கள் குழந்தையாகப் பெண் வேண்டாம் என்று பெண்ணே நிணைக்கும் சமூகம் இது.
பெண்ணைப் பெற்றெடுத்த தாயே இவ்விதம் நினைத்துக் கொள்வது, நினைக்கத் தூண்டுவது இந்த சமுதாயத்தின் மிகப் பெரிய கொடுமையாகும். சுயநலத்தால் மட்டுமன்றி பெண் சிசு கருவிலேயே கொல்லப்படாவிட்டால் அவள் இந்தச் சமுதாயத்தில் பலமுறை கொல்லப்படுவாள் என்ற பயத்தாலும் சிசுக்கொலை நடந்து வருகிறது.
அடைத்துக் கொண்டு உயிர்போகும் வரையில் தொண்டையில் நெல்மணிகளைப் போடுவது, குழந்தையைக் குப்புறப் படுக்க வைத்து ஈரக்கோணியை மேலே போட்டு மூடிவைப்பது கோழிக்குழம்பைச் சுடச்சுட சிசுவின் வாயில் ஊற்றுவது போன்ற வகைகளில் எல்லாம் பெண் சிசுக்கள் கொல்லப் படுகின்றன.
சிலர் கருவிலேயே பெண் சிசுவைக் கொன்றுவிட தென்னை ஈர்க்குச்சிகளையும் சில கலவைப் பசைகளையும் பயன்படுத்துகின்றனர். சிலவகை இலைகளை அரைத்து ஊட்டியும் மடிய வைக்கின்றனர். இன்னும் சிலர் இரும்புக் கம்பியைக் கொண்டு கருப்பையில் சிசுவை அழிக்க முயற்சி செய்வதும் உண்டு. இதனால் தன்னுள் உதித்த கருவைச் சிதைத்துப் பாவத்தைச் சம்பாதிப்பதுடன் அந்தத் தாயும் உடலுக்குத் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்கிறாள்.
கருப்பையில் புண்கள் ஏற்பட்டு சீழ் பிடித்து உடல் முழுவதும் பரவி பெண்ணின் அடிப்படை ஆரோக்கியத்தின் முகவரியே இல்லாமல் போய்விடும். சில சமயம் தாயின் உயிருக்கே ஆபத்தாக முடிவதும் உண்டு.
வேண்டும் என்றே குழந்தைகள் கொல்லப்படுவது வெளியில் தெரிவதில்லை. தேவையில்லாத பெண் குழந்தைகள் கவனிக்கப்படாமல் விடப்படுவதாலும் இறந்துவிடுகின்றன.
சமுதாயத்தில் பெண்களுக்கு சிறப்பிடத்தைத் தந்து உயரிய பண்பாட்டை உலகுக்குப் பறைசாற்றும் இடம் தமிழ்நாடு. அருள்புரியும் சிவபெருமான் உமையாளுக்குத் தன்னில் சரிபாதியை கொடுத்துள்ளார். இதன் மூலம் வாழ்விலும் வளத்திலும் பெண்களுக்குச் சம உரிமை உண்டு என்பதை ஆண்டாண்டு காலமாக உணர்த்திக் கொண்டுவரும் புண்ணிய பூமி இது.
நதியை, கடலை, மண்ணை, செடியை எல்லாவற்றையும் பெண்ணாகப் போற்றும் - தாயாகவும் தெய்வமாகவும் வணங்கி வழிபடும் - இந்த நாட்டில் தான் பெண் சிசுக் கொலைகளும் கற்பழிப்புகளும் பெண் கொலைகளும் அதிக அளவில் நடந்து வருகின்றன.
பெண்ணுரிமைக்காகப் போராடிய தலைவர்களும் எழுதிய எழுத்தாளர்களும் பாடிய கவிஞர்களும் தமிழகத்தில் தான் அதிகம். ஆனால் அவர்களது கருத்துக்கள் படிப்பறிவற்ற கிராமப்புற மக்களை எட்டவே இல்லை என்பதுதான் உண்மை.
வெளி உலகுக்கே தெரியாவண்ணம் ஓசைப்படாமல் பெண் இனத்தின் சதவிகிதம் இன்று குறைந்து கொண்டு வருகிறது. பெண் சிசுக் கொலை விஷயத்தில் தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது பஞ்சாப் மாநிலம். அங்கு கருவில் உள்ள குழந்தை பெண் என்றால் உடனே அழித்து விடுகின்றனர்.
இதற்கென பஞ்சாபில் கருக்கலைப்பு மையங்கள் நம்மூர் லாட்டரி சீட்டுக் கடைகள் போல் ஆங்காங்கே புற்றீசல்கள் போல முளைத்துள்ளன. இதைவிடவும் கொடுமை அங்கே கையில் ஸ்கேன் கருவியுடன் கருக்கலைப்பு செய்யும் சில போலி டாக்டர்கள் அலைந்து கொண்டும் உள்ளனர்.
கருவில் வளரும் குழந்தை பெண் என்ற காரணத்திற்காகக் கருக்கலைப்பு செய்பவர்கள் இந்தியர்களும் சீனர்களுமே என்றும் அவர்கள் நன்கு கல்வித் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் மக்கள் கூறுகின்றனர்.
குழந்தையின் பால் என்ன என்று நவீன கண்டுபிடிப்புகளின் உதவியுடன் கண்டுபிடிக்கும் இந்தத் தம்பதியரில் பெரும்பாலோர்க்கு ஏற்கனவே பெண் குழந்தைகள் இருப்பார்கள். எனவே தங்களது மூன்றாவது அல்லது நான்காவது குழந்தையாவது ஆணாக இருக்கவேண்டும் என விரும்பி கருவில் இருப்பது பெண்ணானால் அதைக் கருக்கலைப்பு செய்ய விரும்புகின்றனர்.
இதற்கான காரணங்கள் பல உண்டு என்றாலும் பெண் குழந்தைகளுக்கு மாப்பிள்ளை தேடுவது சிரமம் என இன்னும் சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் தங்களது குடும்பப் பெயரை ஏற்றுக் கொள்ள ஆண் குழந்தைகளை நாடுகின்றனர். இன்னும் சிலர் ஆண் குழந்தையை வளர்க்கும் அனுபவத்தை விரும்பி பெண் கருவைக் கலைக்க முயலுகின்றனர்
பிரசவத்திற்கு முன் கருவில் இருப்பதைக் கண்டறிய மருத்துவத் துறையில் பிரிநேடல் டயாக்னஸ்டிக் என்ற நுட்பமான பரிசோதனை முறை உள்ளது. இதைப் பயன்படுத்திக் கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதைக் கண்டறிய முடியும்.
21ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் அறிவியல் பல்வேறு கூறுகளில் அசுர வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இன்னும் கிராமப் புறங்களில் பெண் சிசுக்களை அழிக்கும் பாமரத்தனமான பத்தாம் பசலித்தனமான கொடிய சமூகப் பழக்கத்திற்கு சட்டத்தின் மூலமும் அறியாமையால் இயங்கும் அந்தச் சமுதாயத்திற்கு மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
பெண் என்றால் கேவலம் இல்லை. ஆண் எப்படி ஒரு மனிதனோ அதேபோல் பெண்ணும் ஒரு மனுஷி என்பதை மறக்கக் கூடாது. ஆண் பெண் இருவரும் சமம். ஒரு ஆண் செய்யக்கூடிய அணைத்து வேலைகளையும் ஒரு பெண் செய்வதோடு மட்டுமன்றி ஓர் ஆணுக்குத் தாயாகவும் சகோதரியாகவும் மனைவியாகவும் பாசத்துடன் கவனித்து ஒரு குடும்பத்தைத் திறம்பட நிர்வகிக்கும் திறமை படைத்தவள்.
ஆகவே பெண்ணைத் தெய்வமாக மதித்து வழிபடாவிட்டாலும் பரவாயில்லை. பெண்தானே என்று கேவலமாக நடத்தாமல் சமமாக நடத்தினால் போதுமானது. பெண் இனத்தை அழிக்காமல் காப்பாற்றினாலே பெண் சமுதாயத்திற்குப் பெரிய சேவை செய்தது போல் ஆகும்.

No comments:

Post a Comment