மதுவினால் ஏற்படும் பாதிப்புகள்
மது அதிகமாக அருந்தும் போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமாக கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன. அதே நேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே செலவழிக்கப் படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரலை பெரிதாக்கிவிடும்.
மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள்
கல்லீரல் செல்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குதல், கொழுப்புப் பொருட்கள் அதிகம் மிகுந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல். ஹையலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரிதாதல், ஹையலினால் நார் இழமைப் பொருட்கள் மிகுதல் போன்றவை தோன்றி இறுதியில் கல்லீரல் இறுக்கி நோயாக மாறும். அதிக மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப் படியும்.
அறிகுறிகள்
துவக்கத்தில் அறிகுறிகள் தெரியாது, ஆரம்ப நிலையில் கல்லீரல் வீக்கம் இருக்கும். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொந்தரவுகளுடன் காமாலை, மூளை நலிவு, மகோதரம், வைட்டமின் சத்துக்குறைபாடு, பித்தநீர் குழாய் அடைப்பால் வயிற்றுவலி போன்றவையும் பிறகு கல்லீரல் இறுக்கி நோயும் வரும்.
சிகிச்சை
கல்லீரல் செல்கள் தாங்களாகவே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் பெற்றவை. அதனால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை மது அருந்துவதை விட்டுவிடுவதுதான். உடல் எடைக்குத் தேவையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். தேவையற்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். கல்லீரல் இறுக்கி நோய் வருமுன் தடுப்பு முறைகளை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் கல்லீரல் தவிர, இதயம், மூளை, நரம்பு மண்டலம், இனவிருத்தி உறுப்புகள், கணையம், இரைப்பை குடல்கள் என பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்.
No comments:
Post a Comment