Thursday, November 11, 2010

இதய தசை நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்

இதய தசை நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்

Symptoms and types of Cardiomyopathy - Food Habits and Nutrition Guide in Tamil
எந்த வகை இதய நோயும் பயமுறுத்தக் கூடியதுதான். அது என்னவென்று தெரியாவிட்டால் இன்னும் மோசம். (கார்டியோ மயோபதி) இதய தசை நோயின் காரணங்கள், அறிகுறிகள், அறிவிப்புக்களை அறிந்து கொள்வதால், உங்கள் இதய நோயைப் புரிந்து கொள்ளவும் சமாளிக்கவும்முடியும்.
இதய தசை நோய்:
கார்டியோமயோபதி என்றால் என்ன?
கார்டியோ என்றால் இதயம், மயோ என்றால் தசை, பதி என்றால் நோய். இந்த நோயினால் இதய தசை பாதிக்கப்பட்டு வலுவிழக்கிறது. வலுவிழந்த இதய தசை மெலிந்து பெரிதாகலாம். முழு இதய தசையும் வலுவிழந்து இரத்தத்தைக் குறைந்த செயல்திறனுடன் பம்ப் செய்கிறது. இதயம் மெதுவாக பம்ப் செய்ய முடியாத நிலையை அடைகிறது. உடலுக்குப் போதிய இரத்தத்தை அதனால் அனுப்ப முடியாது.
கார்டியோமயோபதி இருபாலினரையும் எல்லா வயதினரையும் தாக்குகிறது. பொதுவாக இது நீண்ட நாள் (கிரோனிக்) நோய். நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சையினால் இந்நோய் அரிதாகக் குணமாகிறது. ஆனால் அறிகுறிகளைக் குறைக்கலாம்.
இதய தசை நோயின் வகைகள்:
இதய தசை நோயில் மூன்று வகை உண்டு.
  • விரிந்த இதய தசை நோய்
  • ஹைபர் டிராபிக் கார்டியோமயோபதி
  • ரெஸ்டிரிக்டிவ் கார்டியோமயோபதி
விரிந்த இதய தசை நோய்: (Diated Cardiomyopathy)
விரிந்த இதய தசை நோய் மிக அதிகமாகக் காணப்படும் இதய தசை நோயாகும். இதனால் இதய தசை முழுவதும் வலுவிழந்து குறைவாக இரத்தம் அனுப்பப்படுகிறது. பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. எல்லா வயதினருக்கும் ஏற்படலாம் என்றாலும் 30-50 வயதினருக்கு அதிமாக ஏற்படுகிறது. ஒன்றிலிருந்து ஒன்றரை சதவிகிதத்தினருக்கு விரிந்த இதய தசை நோய் இருக்கிறது.
இதய தசை நோயுள்ள பெரும்பாலானவருக்கு இதய தமனி நோய் (இஸ்கிமிக் கார்டியோ மயோபதி) இருக்கிறது. சமீபத்திய வைரஸ் தொற்றால் விரிந்த இதய தசை நோய் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஜலதோஷம் அல்லது ஃபுளூவைப் போல் அது ஆரம்பிக்கலாம். ஆனால் இதயநோயாக பிறகு உருவெடுக்கிறது. இந்த இதய நோயுள்ளவர்களில் ஐவரில் ஒருவரின் முன்னோருக்கு இந்நோய் இருந்தது தெரிய வருகிறது. எனவே, இது பரம்பரையாகவும் வரலாம். இதய தசை நோயுள்ளவர்களில் பாதிப் பேருக்குக் காரணம் கண்டறிய முடியாது. குடிப்பழக்கம், கருவுறுதல், விஷங்கள், குறைந்த போஷாக்கு, ஹார்மோன் கோளாறு, உயர் இரத்த அழுத்தத்தினால் இதய தசை நோய் உருவாகலாம்.
உயர் இரத்த அழுத்த இதய தசை நோய்: (Hyper Traffic Cardiomyopathy)
அரிதாக ஏற்படும் இதய தசை நோயின் இவ்வகையில் இதயத்தால் ஓய்வெடுக்க, இரத்தத்தை நிரப்ப முடியாது. இது உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்பு கொண்டிருக்கலாம். பொதுவாக பரம்பரையாக ஏற்படுகிறது. இதய தசையின் அளவு அதிகரித்து இதயத்தை விட்டு இரத்தம் வெளியேறுவது தடைபடுகிறது. இதய வலி, மூச்சுவிட சிரமம், மயக்கம், தலைசுற்றல் போன்றவை முக்கியமாக வேலை செய்தால் ஏற்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட இதய தசை நோய்: (Restrictive Cardiomyopathy)
இவ்வகை இதய தசை நோயும் அரிதாக ஏற்படுகிறது. இதய தசையால் இரத்தத்தை அனுப்ப முடியும். ஆனால் ஓய்வெடுத்து இரத்தத்தை நிரப்ப முடியாது. இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. நீர்கோர்த்தல், வீக்கம் (எடிமா) மயக்கம் போன்றவை ஏற்படலாம்.
இதய தசை நோயின் முக்கிய அறிகுறிகள்:
சிலசமயம் இதய தசை நோயின் காரணம் ஒன்றல்ல பல. உதாரணமாக, குடிப்பழக்கமும் அதிக இரத்த அழுத்தமும் இணைந்து இந்நோயை உருவாக்கலாம். காரணங்கள் எதுவானாலும் இதய தசை நோயின் அறிகுறிகள் ஒன்றுதான். இந்த அறிகுறிகள் வெவ்வேறு அளவில் தென்படலாம். இவை இதயம் சாதாரணமாக இரத்தத்தை அனுப்ப முடியாததால் ஏற்படுகின்றன.
இதயதசை நோய் மோசமானால் ஹார்ட்ஃபெயிலியராகலாம். இதற்கான அறிகுறிகள் வேறுபடுகின்றன. சிலருக்கு அறிகுறிகள் தென்படாது. ஆனால் அசாதாரணமான (ECG) எலக்டிரோ கார்டியோகிராம் இருக்கும். மார்பு எக்ஸ்ரேயில் வீங்கிய இதயம் தென்படும். அறிகுறிகள் மோசமாவதற்கு, பல வருடங்கள் முன்னரே சோர்வடைவது ஏற்படுகிறது. செயல்புரியும்போது, பிறகு மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை முக்கிய அறிகுறியாகும். கணுக்கால்களில் வீக்கம், எடை அதிகரிப்பு போன்றவற்றால் மருத்துவரின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்படும்.
இதய தசை நோயின் மேலும் சில அறிகுறிகள்:
  • மூச்சு விட சிரமம்
  • சோர்வு (ஃபெடிக்)
  • மார்பு வலி
  • எடை அதிகரிப்பு
  • வீக்கம் (எடிமா)
  • மயக்கம், தலை சுற்றல்
  • விட்டு விட்டு இதயம் துடித்தல்
இந்த அறிகுறிகளின் காரணங்களைப் புரிந்து கொண்டால் சிகிச்சைத் திட்டத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்கள் உடல் தனக்கே உரிய வழியில் நோயினால் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவரிடம் அறிகுறிகள் பற்றி விவாதிப்பதால் கட்டுப்படுத்தலாம். அறிகுறிகளில் மாற்றம் ஏற்படுவது நோய் குணமாவதை அல்லது மோசமாவதைக் காட்டும். எந்த மாற்றத்தையும் மருத்துவரிடம் கூறுங்கள். சிகிச்சையில் மாற்றம் செய்ய அது உதவும்.
இதய தசை நோய்க்கு சிகிச்சை:
இதய தசை நோய்க்கான பலவகையான சிகிச்சைகளை இந்தப் பகுதியில் காணலாம். இதய தசை நோய்க்கான காரணம் கண்டறியப்பட்டால், அதை இலக்காக வைத்து சிகிச்சை தரப்படும். சிகிச்சை ஒவ்வொருவருக்கும் பிரத்தியோகமானது. எனவே இவற்றில் சில உங்களுக்குப் பொருந்தாது. சிகிச்சையினால் இதயம் மறுபடி சாதாரணமாக இயங்க ஆரம்பித்து விடாது. சிகிச்சையின் முக்கியக் குறிக்கோள், இதயத்தை மேலும் திறனுடன் இயங்க வைப்பதுதான்.
சிகிச்சைத் திட்டத்தின் சுருக்கம்:
மேலான வாழ்க்கைத் தரத்தை அடையவும், குறைவாக மருத்துவமனையை அணுகவும் உங்களுடைய மருத்துவருடன் இணைந்து செயல்புரிவது அவசியமாகும். உங்களை நீங்களே எப்படி பார்த்துக் கொள்வது என்று தெரிந்து கொண்டு சிகிச்சைத் திட்டத்தில் முழுமையாக ஈடுபடுங்கள். எப்போது மாற்றம் ஏற்படுகிறது என்று உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். சரியான சமயத்தில் மருத்துவரைச் சந்தியுங்கள். சிகிச்சைத் திட்டத்தை ஒழுங்காகக் கடைபிடியுங்கள்.
செயல்கள்:
முதலில் உங்கள் செயல்கள் குறைக்கப்படும். இதயத்தில் வைரஸ் தொற்று இருக்கும் வாய்ப்பு இருந்தால், சிறிது காலம் படுக்கையில் ஓய்வெடுக்க நேரிடலாம். படுக்கையின் தலைப்பாகம் உயர்த்தப்பட்டால் சுவாசிப்பது எளிது.
உங்கள் கால்களை அவ்வப்போது நகர்த்தி அவற்றிற்கு பயிற்சி தர வேண்டும். இதனால் இரத்தம் கால்களில் தங்காமல் தடுக்கப்படுகிறது. உங்கள் கால் விரல்களை கீழே வளைத்து பிறகு முழங்காலை நோக்கி பின்னால் வளைத்து பயிற்சி செய்யுங்கள். இது பெடலை அழுத்தி பிறகு மேல் வர விடுவது போன்றது.
தலை சுற்றல் ஏற்படாமல் இருக்க உடல்நிலை மாற்றத்திற்கு உடலை தயாராக விடுங்கள். படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது படுக்கையின் ஓரமாக அமர்ந்து, எழுந்து நிற்கும் முன்பு சில நிமிடங்கள் ஓய்வெடுங்கள். அதிகமாக உட்கார்வது பிறகு நிற்பது போன்ற செயல்களைத் தவிர்த்துவிடுங்கள்.
மருத்துவமனையை விட்டுச் செல்வதற்கு முன் என்ன செயல்களைச் செய்யலாம் என்று மருத்துவரிடம் கேளுங்கள். நடக்கும் தூரத்தை மெதுவாக அதிகரிக்கும் எளிய தினசரி உடற்பயிற்சிகள் அடங்கிய திட்டம் உங்களுக்குத் தரப்படும். உங்கள் இதயத்தையும், தசைகளையும் வலுவாக்க சுறுசுறுப்பாக இருங்கள். உங்கள் செயல்களை மெதுவாக அதிகரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எந்தச் செயல்களைத் தவிர்ப்பது என்று தீர்மானிக்க மிகச் சிறந்த நபர் நீங்கள்தான்.
உங்கள் தொழில் மிகவும் கடினமாக இருந்தால் அதை விட வேண்டி இருக்கலாம் அல்லது மாற்ற வேண்டியிருக்கலாம். நீங்கள் குணமாகும் வரை தற்காலிகமாக ஓய்வு பெற வேண்டியது அவசியம். நீங்கள் மெதுவாக செயல்பட ஆரம்பித்த பிறகு, உங்கள் தொழிலுக்கு முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ செல்லலாம். நீங்கள் எப்போது வேலைக்குத் திரும்பலாம் என்பதை உங்கள் இதயம் குணமடையும் விதமும், நீங்கள் எப்படி சிகிச்சைத் திட்டத்திற்கு ஒத்துழைக்கிறீர்கள் என்பதும் தீர்மானிக்கும்.
களைப்பு அறிகுறிகள்:
உணர்வு சிக்கலும் உடல் சிரமமும் உங்கள் இதயத்திற்கு அதிக சிரமம் தருகின்றன. உங்கள் இதயம் அதிக வேலை செய்யத் தூண்டுபவை அதிக உணவு உண்பது, ஆல்கஹால் அருந்துவது, புகை பிடிப்பது, மன வருத்தம், குளிர்ந்த, வெப்பமான, ஈரப்பதமான தட்ப வெப்ப நிலை, தூக்குவது, தள்ளுவது, இழுப்பது. உங்கள் உடலுக்குத் தேவையான இரத்தத்தையும், பிராண வாயுவையும் உங்கள் இதயத்தால் தரமுடியாவிட்டால் களைப்பின் அறிகுறிகள் ஏற்படும். இவை, மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, மார்பு வலி, தலைசுற்றல், அதிக களைப்பு, சோர்வு, அதிக வேர்வை.
களைப்பின் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக நிறுத்தி ஓய்வெடுங்கள். செயல் புரியும்போது மார்புவலி, (ஆன்ஜய்னா) ஏற்பட்டால், நைட்ரோ கிளிசரின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தால், ஒரு மாத்திரையை நாக்கின் அடியில் வைக்கவும். ஐந்து நிமிடங்களில் வலி அடங்காவிட்டால், இன்னொரு மாத்திரையை உபயோகிக்கவும். ஐந்து நிமிடங்கள் பொறுத்த பிறகு மூன்றாவது மாத்திரையை உட்கொள்ளலாம். இதனால் உங்கள் மார்புவலி நிற்காவிட்டால் அல்லது வலி அதிகரித்தால் மருத்துவரை அழையுங்கள். இதய தசையின் வேலையைக் குறைத்து, இதய தசைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து நைட்ரோகிளிசரின் மார்பு வலி நிற்க உதவுகிறது.
மற்ற அறிகுறிகளைச் சமாளிப்பது:
அதிகம் உண்ட பிறகு குமட்டல், அழுத்தம் ஏற்பட்டால் குறைந்த அளவு உணவை அடிக்கடி உண்ணுங்கள். உங்கள் வயிற்றில் நீர் சேர்ந்தது காரணமாக இருக்கலாம். குமட்டல், அழுத்தம் பற்றி மருத்துவரிடம் தெரிவியுங்கள். ஏனெனில் அது வேறாகவும் இருக்கலாம்.
குறைந்த வேலை, மற்றும் வயிற்றில் நீர் சேர்ந்ததால் மலச்சிக்கல் ஏற்படலாம். மலத்தை வெளியேற்ற சிரமப்படுவதால் இதயம் சிரமப்பட நேரிடுகிறது. மலமிளக்கிகள் தரப்படலாம். கால், பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கால்களை உயர்த்துங்கள். வீங்கிய தசையினால் புண்கள் எளிதில் ஏற்படுகின்றன. இப்பகுதியில் லோஷனைத் தடவி வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காயம் ஏற்படாமல் முடிந்தவரை பார்த்துக் கொள்ளுங்கள். காயம் ஏற்பட்டால் குறைந்த இரத்த ஓட்டத்தினால் மெதுவாகத்தான் குணமாகும்.
இதய தசை நோயை, ஹார்ட் ஃபெயிலியர் அறிகுறிகளைக் குணப்படுத்த மற்ற மருந்துகள் உள்ளன. இங்குக் குறிப்பிடப்பட்ட எல்லா மருந்துகளும் உங்களுக்குத் தரமாட்டார்கள். நீங்கள் உட்கொள்ளும் மருந்து பற்றிய விவரக் குறிப்புகள் உங்களுக்குத் தரப்படும். கீழ்க் கண்டவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பெயர் அளவு கால அளவு குறிக்கோள்:
மருந்துகளின் பக்க விளைவுகள்:
நர்ஸ் அல்லது மருந்து நிபுணர் உங்கள் கால அட்டவணையைத் தருவார். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகளை உட்கொள்ளுங்கள். சில வாசோடைலேடர், ஆன்டி அரித்மிக் மருந்துகளுக்கு ஒவ்வொரு 6, 8 மணி நேரமும் ஒருமுறை தரப்படும். அலாரம் கடிகாரத்தை உபயோகித்து விழித்தெழுந்து இந்த மருந்துகளை உண்ண நேரிடும். உங்கள் நேர அட்டவணை தயார் செய்வதற்குள் உங்கள் நர்ஸ் அல்லது மருந்து நிபுணரிடம் நீங்கள் தூங்கும் நேரங்களைக் கூறினால் அது கணக்கில் கொள்ளப்படும்.
சில மருந்துகள் மற்ற மருந்துகளுடன் உட்கொள்ளும்போது அதிக செயல்திறனுடன் செயல்படும். மற்றவை உணவுடன் உட்கொண்டால் குறைந்த பக்கவிளைவுகளை உண்டாக்கும். ஒருமுறை உட்கொள்ள மறந்தால், அடுத்தமுறை மருத்துவர் கூறினால் தவிர இரண்டு மடங்காக உட்கொள்ள வேண்டாம். உங்கள் அறிகுறிகள் மோசமானால், மருத்துவர் கூறாமல் அதிக மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம்.
உங்கள் கைப்பையில், ஒரு அட்டையில் நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், அளவுகள், கால அட்டவணை போன்றவற்றைக் குறிப்பிட்டு வைத்திருங்கள். பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அறிகுறிகள் அதிகரித்தால் மருத்துவரை அழையுங்கள். மருந்தின் வீரியம் மிக அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம். அல்லது மருந்து மாற்றப்படலாம்.
மருத்துவமனையில் இருக்கும்போது சிரைகளின் (Veins) வழியே மருந்துகள் தரப்படலாம். (I.V. இன்ட்ராவீனஸ்) I.V. மருந்துகள் விரைவாக செயல்பட்டு உங்கள் அறிகுறிகளைக் குறைத்து உங்கள் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை அதிகரிக்கின்றன. உங்கள் உடல்நிலை மேம்பட்டால், மருந்துகளை வாயினால் உட்கொள்ளலாம். அதனால் உடலில் நீண்ட நேரம் அவை செயல்படும்.
சிலருக்கு சில மருந்துகள் செயல்படாமல் போகின்றன. இப்படி நடந்தால், மருத்துவர் வேறு மருந்து தரலாம். உங்கள் உடல்நலத்தை மேம்படுத்தும் மருந்துகளின் சரியான அளவு, பிரயோகத்தைத் தீர்மானிக்கச் சிறிது காலமாகும்.
இதயத் தசை சுருக்கத்தை வலுவாக்கும் மருந்துகள்:
டிஜாக்ஸின் போன்ற மருந்துகள் உங்கள் இதய தசை சுருக்கத்தை அதிக வலுவாக்குகின்றன. அவை உங்கள் இதயம் கடினமாக பம்ப் செய்து அதிக இரத்தம் ஒவ்வொரு சுருக்கத்திலும் செலுத்த உதவுகின்றன. டோபுடமைன் கூட சுருக்கத்தை வலுவாக்குகிறது, சிரையின் வழியே தரப்படுகிறது.
அதிக நீர்த் தேக்கத்தை வெளியேற்றும் மருந்துகள்:
டையூரடிக்ஸ் "நீர் மாத்திரைகள்" என்று சிலசமயம் கூறப்படுகின்றன. சிறுநீரகத்திலிருந்து சோடியத்தையும், நீரையும் வெளியேற்ற அவை உதவுகின்றன. உங்கள் இரத்த மண்டலம், நுரையீரல், திசுக்களிலுள்ள நீரையும் அவை வெளியேற்றும். இதனால் இதயத்தின் வேலை குறையும். ஏனெனில் பம்ப் செய்யக் குறைந்த இரத்தமே இருக்கும். இந்த மருந்துகள் உங்கள் சிறுநீரிலுள்ள சோடியத்துடன் பொட்டாஷியத்தையும் வெளியேற்றலாம். இந்த முக்கிய தாதுப்பொருள் வெளியேற்றப்பட்டால், பொட்டாஷியம் போஷாக்குகளினால் சரிக்கட்டப்படுகிறது.
பொட்டாஷியத்தை (K+) அளிக்கும் மருந்துகள்:
பொட்டாஷியம் ஒரு அத்தியாவசியமான தாதுப்பொருள். அது உங்கள் இதயத் துடிப்பை சரி செய்ய உதவுகிறது. பொட்டாஷியம் அளவு உங்கள் இதயத்தைப் பாதிக்கிறது. உங்கள் இரத்தத்தில் பொட்டாஷியத்தின் அளவு மிக அதிகம் அல்லது மிகக் குறைவு என்றால், விட்டுவிட்டு இதயம் துடிப்பது அல்லது இதய வேலை கெடுவது நிகழ்கிறது. பல நீர் மாத்திரைகளினால் அதிக அளவு பொட்டாஷியம் சிறுநீரகத்திலிருந்து வெளியேறுகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவை நீங்கள் உண்ண வேண்டும். அல்லது வாய் வழியே பொட்டாஷியம் நிறைந்த உணவை உட்கொள்வதால் குறைந்த பொட்டாஷியம் அளவு சீராக்கப்படும். பொட்டாஷியத்தின் அளவு குறைந்தால், தசை இழுப்பு, சோர்வு, பலவீனம் போன்றவை ஏற்படும்.
பொட்டாஷியம் போஷாக்குகள் சுவையாக இருக்காது. எனவே உணவு உண்டபிறகு அவற்றை உண்பதால் வயிறு பாதிக்கப்படாது. குளிர்ந்த சாறுகளை உபயோகித்து சுவை தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். சிலர் ஆரஞ்சு அல்லது திராட்சை சாற்றில் பொட்டாஷியத்தைக் கலந்து குடிப்பார்கள்.
இரத்தக் குழாய்களை விரிக்கும் மருந்துகள்:
வேஸோடைலேட்டர்கள் என்பவை உங்கள் இரத்தக் குழாய்களைத் திறக்கும் அல்லது விரிவடையச் செய்யும் மருந்துகளாகும். தமனிகள் விரிவடையும்போது அதிக எதிர்ப்பின்றி இதயத்தால் இரத்தத்தை பம்ப் செய்ய முடியும். எனவே இதய தசையின் வேலை குறைகிறது. சிரைகள் விரிவடைந்து, இரத்தம் குறைவாக இதயத்தை அடைந்து, சிக்கல் குறைக்கப்படும். இந்தச் செயல்களால் இதய அறைகளில் அழுத்தம் குறையும். சில வேஸோடைலேட்டர்கள் தமனிகள், சிரைகள் இரண்டையும் விரிவடையச் செய்யும். உங்கள் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகள் தரப்படும். உங்கள் மருத்துவர் பல வேஸோடைலேட்டர் மருந்துக் கலவைகளை உபயோகித்துப் பரிசோதிப்பார். ஏனெனில் ஒவ்வொரு உடலும் வெவ்வேறு விதத்தில் செயல்படுகிறது. ஹைட்ரலைசின், ஐசோ சார்பைட், டைநைட்ரேட், ACE இன்ஹிபிட்டர்ஸ் போன்றவை வோஸோடைலேட்டருக்கான உதாரணங்கள்.
இரத்தம் கட்டியாவதைத் தள்ளிப்போடும் மருந்துகள்:
குறைந்த செயல்கள், இரத்த ஓட்டத்தினால் இதயத்திலும், இரத்தக் குழாய்களிலும் இரத்தக் கட்டிகள் ஏற்படலாம். சாதாரணமாக இரத்தம் கட்டியாகாமல் தடுக்க ஆன்டிகோவாகுலண்ட் மருந்துகள் தரப்படுகின்றன. உங்கள் கால்கள், இதயம், நுரையீரலில் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்தக் கட்டிகள் அபாயகரமாக ஏற்பட்டு விடாமல் அவை தடுக்கின்றன. பரிசோதனைகளினால் உங்கள் இரத்தம் கட்டியாகும் நேரத்தைப் பரிசோதிப்பது அவசியம்.
இந்த மருந்ததை நீங்கள் உபயோகிக்கும் போது நீங்கள் எளிதில் வெட்டுப்படும், காயப்படும் சூழல்களைத் தவிர்த்திடுங்கள். உதாரணமாக மின்சார ரேசர் உபயோகியுங்கள். ஷூ அணியுங்கள். காயப்படாதீர்கள். உங்களைக் காயப்படுத்திக் கொண்டால் இரத்தம் நிற்கும் வரை அங்கு அழுத்துங்கள். மருத்துவரிடம் கேட்காமல் ஓவர் தி கவுண்டர் (OTC) மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். பல மருந்துகள், ஆஸ்பிரின் உட்பட, ஆன்டிகோவாகுலண்டோடு வினை புரிகின்றன. உங்கள் பல் மருத்துவர், மருந்து நிபுணர், மற்ற மருத்துவர்களிடம் இம்மருந்து உட்கொள்வது பற்றிக் கூறுங்கள். நீங்கள் ஆன்டி கோவாகுலன்ட் மருந்தை உட்கொள்கிறீர்கள் என்று தெரிவிக்கும் மெடல் அல்லது அட்டையை அணிந்திடுங்கள்.
செயல்புரியும் கூட்டாளி:
உங்களைப் பராமரிப்பதில் செயல்புரியும் கூட்டாளியாக இருந்து உங்கள் இதய நோயைச் சமாளிக்க உதவலாம். உங்கள் இதய நோய் மெதுவாகப் பல மாதங்கள், வருடங்களில் உருவாகியிருக்கும். சில நாள் அல்லது வாரங்களில் மறைந்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். நல்ல, கெட்ட நாட்கள் இரண்டுமே இருக்கும். சந்தோஷமாக இருந்தால் மிதமிஞ்சி அதில் திளைக்க வேண்டாம். விரைவில் நீங்கள் சோர்ந்து போய் வரும் நாட்களில் மோசமாக உணரலாம்.
இக்கையேட்டில் குறிப்பிட்டுள்ளவை இதய தசை நோயைக் குணப்படுத்திவிடாது. ஆனால் அந்நோயுடன் வாழ உங்களுக்கு உதவும். இந்நோய்க்கான மேலான முறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. முதல் சிகிச்சை ஆரம்பிப்பது மிக முக்கியமானது. முதலிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை தரப்பட்டால், இதய தசை நோயுள்ள சிலர் குணம் கண்டிருக்கின்றனர்.
இதய தசை நோயின் சிக்கல்கள்:
எல்லா இதய நோயிலும் சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் இதய நோயால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு முக்கிய சிக்கல்களை உங்கள் நினைவில் வைத்திருங்கள். இரத்தம் கட்டியாவதும் கல்லீரல் நீர் கோர்ப்பதும்தான் அவை. அதிகம் தெரிந்து கொள்வதால் ஒரு பிரச்சினையை விரைவில் கண்டறிந்து மருத்துவரிடம் உதவி கேட்கலாம். அபாயமான சிக்கல்களை, மாற்றங்களை உடனுக்குடன் கூறுவதால் தவிர்க்கலாம். முதலிலேயே கண்டறியப்பட்டால் சிகிச்சை தருவது எளிதானது.
இரத்தக் கட்டிகள்:
இதயத்தசை நோயினால் சாதாரணமானதைவிட மெதுவாக இரத்தம் உடலில் செலுத்தப்படுகிறது. சாதாரணமாக உங்கள் இதயம் பம்ப் செய்யாததால், இரத்தக் கட்டி (த்ராம்பஸ்) உருவாகும் வாய்ப்புகள் உண்டு. இதயம் அல்லது காலில் உண்டாகும் இரத்தக் கட்டி உடலின் எந்தப் பாகத்திற்கும் சென்றுவிடும். மூளைக்குச் செல்லும் இரத்தக் கட்டி ஸ்ட்ரோக்கை உருவாக்கலாம். நுரையீரலுக்குச் செல்லும் இரத்தக் கட்டியால் மார்பில் வலி, மூச்சுத் திணறல் ஏற்படலாம். இதயத்துடிப்பு அதிகரிப்பது, இருமும் போது சளியில் இரத்தம் தென்படுவது போன்றவை ஏற்படலாம். காலில் உள்ள இரத்தக் கட்டியால் வலி, வீக்கம், சிவப்பு, அந்த இடத்தில் சூடு போன்றவை உண்டாகலாம். இம்மாதிரியான அறிகுறிகளை உடனடியாக மருத்துவரிடம் தெரிவியுங்கள்.
இரத்தக் கட்டிகளைத் தவிர்த்திட, இரத்தம் கட்டியாவதைத் தள்ளிப் போடும் (ஆன்டி கோவாகுலண்ட்) மருந்துகளை உங்கள் மருத்துவர் தருவார். நீண்டகாலம் படுக்கையில் இருப்பதால் இரத்தக்கட்டி உண்டாகாமல் தடுக்க உடற்பயிற்சி செய்வது அல்லது நடப்பது உதவும்.

No comments:

Post a Comment