காது வலியினாலும் மயக்கம் வருமா?
காது நோய்கள் என்றால் அந்த விஷயத்தை நாம், நம் காதுகளோடு மட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது. அது காது, மூக்கு, தொண்டை என்று ஒரு முக்கேணத்தை உண்டாக்கி மூளையைக்கூட சில சமயங்களில் முடக்கி விடுவதுண்டு. சளி பிடித்தால் காதடைக்கிறது. மூக்கு "ரிலீஸானால்" காது ரிலாக்ஸ் ஆகிறது. இப்படி "E.N.T." பிரச்சினை என்று சொல்லப்படுகிற நோய்களுக்கு கதவடைப்பு நடத்த நாம் முதலில் என்ன செய்ய வேண்டும்? முதலில் அந்த நோய்கள் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு மருத்துவரை அணுக வேண்டும்.
"அப்படி காதில் என்னதான் பிரச்சினைகள் வந்து விடப் போகின்றது?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சாதாரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி உண்டாகும்போதோ அல்லது மற்ற சமயங்களிலோ காதில் சீழ் வருகிறது என்பார்கள். காதை வெளிக்காது, நடுக் காது, உள் காது என்று மூன்றாகப் பிரிக்கலாம். இதில் ஏதேனும் ஒன்றில் கிருமித் தொற்று ஏற்படும்போது காதில் இருந்து வெள்ளையாய் சீழ் வருகிறது. அது துர்நாற்றம் கொண்டதாகவும் இருக்கும். இதனை காதில் தொற்று என்பார்கள்.
காதுத் தொற்று:
இதனை குறுகிய காலத் தொற்று, நெடுநாளையத் தொற்று என்று சொல்வார்கள். ASOM (ACUTE SUPPORATIVE OTITIS MEDIA), CSOM (CHRONIC SUPPORATIVE OTITIS MEDIA) என்பார்கள். காதில் சீழ் வடிந்து துர்நாற்றம் அடிக்கும்போது சில சமயங்களில் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவித்திறனும் பாதிக்கப்படலாம்; காது மந்தமாகலாம். அல்லது முழு செவிடும் ஆகலாம். காதில் வரக்கூடிய எந்தத் தொற்றையும் விரட்டக்கூடிய PULSATILLA, CAPSICUM, VERBASCUM, MERC.SOL போன்ற அருமையான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. காதால் சிலருக்கு மயக்கம் வருகிறது. "தண்ணி" அடித்ததுபோல் தலை சுற்றுகிறது என்பார்கள். இது உண்மைதான். இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தலை சுற்றல், மயக்கம் ஆகியவை காதுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் இதனை "ஹார்ட் அட்டாக்"கிற்கு சமமானது என்றுகூட சொல்வார்கள்.
மயக்கம்:
சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு மூளையில்தான் மயக்கம் ஏற்படுகிறது என்று மருத்துவ உலகம் நம்பிக் கொண்டிருந்தது. இந்நிலையில் மயக்க நோயாளி ஒருவர் இறந்தபோது அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது அந்த நோயாளிக்கு உட்காதில் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாலும் தலைசுற்றல், மயக்கம் வரும் என்பதை தெரிந்து கொண்டார்கள். இந்த உண்மையைக் கண்டு பிடித்தவர் "மீனியர்" என்ற பிரெஞ்சு டாக்டர். எனவே தான் காது கேளாமை, காது இரைச்சல், மயக்கம் ஆகிய இந்த மூன்றும் சேர்ந்த நோய் "மீனியர்ஸ் நோய்" என்று அழைக்கப்படுகிறது. இது மூளையாலோ, நரம்பினாலோ ஏற்படுவதில்லை. இந்தியாவில் இந்தப் பிரச்சினை 20 சதவிகிதம் பேருக்கு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உடலில் மயக்கம் ஏற்படுவதற்கான எல்லா காரணங்களையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக ரத்த அழுத்தம், ரத்தத்தில் பால்வினை நோய், பிடிப்பு நோய், மனநோய் ஆகியவை இருக்கிறதா என்று ஆராய வேண்டும்.
மயக்கத்துக்கு நம் உணர்ச்சிகள்தான் மிக முக்கிய காரணமாக அமைகிறது. அதாவது அதிர்ச்சி தரக்கூடிய விபத்து, உறவினர்களின் திடீர் மரணம், எதிர்பாராத ஏமாற்றம் போன்ற துயரச் சம்பவங்களாலும் மயக்கம் ஏற்படுகிறது. இது தவிர நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ஊட்டச்சத்து குறைபாடுகள், வைட்டமின் பற்றாக்குறை, ரத்தநாள பாதிப்புகள், உடலில் அதிக அளவு சோடியம் உப்புச் சேருதல், ஒவ்வாமை, பெண்களுக்கு மாதவிலக்கு மாறுதல் போன்ற காரணங்களாலும் இந்த நோய் ஏற்படலாம்.
தலைசுற்றல், மயக்கம் ஏற்படும் நோயாளிகளில் 5 சதவிகிதம் பேருக்கு நோய்க்கான முக்கிய காரணத்தைக் கண்டுபிடிக்கவே முடியாத சூழ்நிலையும் உள்ளது. இத்தகையவர்களுக்கு பலவகையான உடற்பயிற்சிகளே சிகிச்சையாகிறது. கண்களை மேலும், கீழுமாகப் பார்க்க வைத்தல், தலையை முன்னும், பின்னுமாக அசைப்பது, தோள் பயிற்சி, குனிந்து நிமிர்தல், உடலோடு சேர்த்து தலையை வலது, இடது பக்கமாகத் திருப்புதல் போன்றவை நல்ல பலன் தரும். யோகாவும் உதவும்.
இதனால் கண், காது மற்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் சீர் செய்யப்படுகின்றன. எந்தச் செயலால் தலை சுற்றல், மயக்கம் ஏற்படுகிறதோ அதைத் திரும்ப திரும்ப செய்யும்போது பழக்கமாகி விடும். அதேபோல் இந்த நோயை எதிர்த்து நிற்க மற்ற உறுப்புகளும் தயாராகி விடுகின்றன.
மீனியர்ஸ் நோயின் அறிகுறிகள்:
இந்த நோய் விட்டுவிட்டு வரும். ஓய்வில் இருக்கும்போதும், தூங்கும் போதும் கூட வரும். நோயாளிக்கு தானே தலை சுற்றுவது போலவும் தோன்றும். இவ்வாறு தலை சுற்றும்போது காது கேளாமையும், காது இரைச்சலும் ஏற்படும். அதோடு சிலருக்குக் கடுமையான குமட்டலும், வாந்தியும் ஏற்படும். அப்போது படுக்கையிலே இருக்க வேண்டும் என்கிற உணர்வும் உண்டாகும். பயம் படுத்தி எடுக்கும். இதற்கு நிம்மதி தருவது படுக்கைதான்.
No comments:
Post a Comment