Tuesday, October 26, 2010

புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள்

புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் ( Exclusive interview with Mr. Pazha Nedumaran - Tamil Katturaikal - General Articles "விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக சண்டையிட முடியாது. இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலிமை குன்றிவிட்டார்கள். இனி அவர்களால் எதிர்த்துப்போராட இயலாது" என்று சிங்கள இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
கடந்த கால வரலாறுகளை மறந்து சிங்கள இராணுவத் தளபதிகள் பலரும் இதைப்போல வாய்ச்சவடால்கள் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் புளுகுகளைத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. உலக நாடுகளும் உண்மைகளை அறிந்தே வைத்துள்ளன. எனவே உலக நாடுகளையும் இவர்களால் ஏமாற்ற முடியாது. அவ்வப்போது இத்தகைய புனைகதைகளை அவர்கள் யாருக்காகக் கூறுகிறார்கள்? சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் இத்தகைய பொய்யான தகவல்களை தொடர்ந்து கூறிவருகிறார். ஏற்கனவே இராணுவ ரீதியில் வலிமை குன்றிப்போய் கிடக்கிறார்கள், பொருளாதார ரீதியில் நொறுங்கிப்போய் சிங்கள தேசம் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய பொய்யுரைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த காலத்திலும் இத்தகைய கட்டுக்கதைகளை கூசாமல் சொன்னவர்கள் பலருண்டு.
தளபதி கல்கத்
1988ஆம் ஆண்டில் இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த கல்கத் வெறும் சவடால் பேர்வழியாக இருந்தார். இந்தியாவில் உள்ள வெத்துவேட்டு அரசியல்வாதிகளைப் போல அடிக்கடி புலிகளைக் குறித்து பொய்யான அறிக்கைகள் விட்டு சுயவிளம்பரப் போர் நடத்திக்கொண்டிருந்தார். தினமும் 20, 30 புலிகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் புலிகளின் முகாம்களைத் தாக்கி அழித்து விட்டதாகவும் செய்திகளைப் பரப்பியபடி இருந்தார்.
இடைஇடையே சென்னைக்கு வருகை தந்து 5 நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் பத்திரிகையாளர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளிப்பார். இந்த விருந்தில் தளபதி கல்கத் தனது வீரதீர பராக்கிராம செயல்களை விவரிப்பார். இச்செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் பத்திரிகையாளர்கள் தனியே சிறப்பாகக் கவனிக்கப்பட்டனர்.
சென்னையில் ஒருமுறை இவர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவிழ்த்துவிட்ட புளுகுகளைக் கேட்டுக் கேட்டு காதுகள் புளித்துப்போன செய்தியாளர் ஒருவர் "எல்லாம் சரி நீங்கள் இது வரை சுட்டுவீழ்த்தியதாகக் கூறப்படும் புலிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் பல ஆயிரம் வருகிறது. புலிகளிடமிருந்து நீங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை சிங்கள இராணுவத்தினரிடம் உள்ள ஆயுதங்களைவிட அதிகமாக இருக்கும் போல் தெரிகிறதே" என்று கேட்டபோது அனைவரும் சிரித்தனர்.
ஒருமுறை தளபதி கல்கத் "பிரபாகரன் இருக்கும் இடத்தை இந்தியப் படை சுற்றி வளைத்துவிட்டது. இனி அவர் தப்ப முடியாது. எல்லா வழிகளையும் அடைத்துவிட்டோம். விரைவில் உயிருடன் அல்லது பிணமாக பிடிபடுவார்". என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படித் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்யும் தளபதி கல்கத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க பிரபாகரன் விரும்பினார். அதற்கான திட்டத்தையும் தீட்டினார். முல்லைத்தீவில் உள்ள ஒரு காட்டிற்கு அருகில்தான் தளபதி கல்கத்தின் முகாம் அமைந்திருந்தது. ஒருநாள் காலைப்பொழுதில் தனது கூடாரத்திலிருந்து தூங்கி எழுந்து தளபதி கல்கத் வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு இராணுவ வீரர்கள் தேனீர் கொண்டுவந்து கொடுத்தனர். ருசித்து அருந்திக்கொண்டிருந்தார்.
சற்றுத் தொலைவில் இரண்டு உலங்கு வானூர்திகள் தயாராக நின்று கொண்டிருந்தன. ஆங்காங்கே படை வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.
அந்த வேளையில் அவர் கண்ணுக்கு எதிரில் சில நூறடிகளுக்கு அப்பால் புலிகள் சிலர் திடீரென்று தோன்றி தரையில் மண்டியிட்டு ஏவுகணைகளை ஏவினர். கண்மூடித் திறப்பதற்குள் இந்திய இராணுவ உலங்கு வானூர்திகள் இரண்டும் தூள் தூளாயின. பயந்து நடுங்கிய தளபதி கல்கத் தாவிக்குதித்து அருகில் இருந்த பதுங்கு குழிக்குள் பாய்ந்தார். அவரது காவலுக்கு நின்ற வீரர்களும் எதிர்பாராத இந்த தாக்குதல்களால் நிலைகுலைந்து சிதறி ஓடினர்.
கண்மூடி திறப்பதற்குள் இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. புலிகள் நிதானமாக நடந்து மீண்டும் காட்டுக்குள்ளே புகுந்து மாயமாக மறைந்து போனார்கள். இவ்வளவு நெருங்கி வந்து ஏவுகணையை ஏவியவர்கள் நினைத்திருந்தால் தன்னையே எளிதாக ஒழித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாததை எண்ணி எண்ணி தளபதி கல்கத்தின் உடம்பு நடுங்கிற்று. அன்றுடன் அவரது ஆணவப் பேச்சு மறைந்தது. புலிகளைப் பற்றி அவதூறு செய்வதை அவர் நிறுத்தினார்.
அமைச்சர் இரஞ்சன் விசயரத்தினா
இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாச இருந்தபோது அவருக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க பாதுகாப்புத்துறை இணையமைச்சராக இரஞ்சன் விசயரத்தினா என்பவர் இருந்தார். சிங்கள பேரினவாத வெறிபிடித்த அவர் தமிழர்களை அடியோடு கருவறுக்க உறுதிபூண்டிருந்தார்.
"புலிகளை அடியோடு அழிப்பதே எனது இலட்சியமாகும். அவர்கள் உயிர் தப்பவேண்டுமானால் எவ்வித நிபந்தனையுமின்றி ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையவேண்டும். இல்லையேல் புலிகள் அழித்து ஒழிக்கப்படுவது நிச்சயம்" என இரஞ்சன் விசயரத்தினா 4-12-90 அன்று கொக்கரித்தார்.
ஆனால், 2-3-91 அன்று கொழும்பு நகரின் வீதியில் காலை 8.30 மணிக்கு தனது பாதுகாப்பு பரிவாரங்கள் புடைசூழ இரஞ்சன் விசயரத்தினா சென்றுகொண்டிருந்தார். அதேவீதியில் ஒருபுறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அமைச்சரின் கார் சுக்கு நூறாக சிதறியது. அமைச்சரும் அவரின் பாதுகாவலர்களும் அடையாளம் தெரியாமல் சிதறிப்போனார்கள்.
தளபதிகள் கொத்தாக பலி
தமிழீழப் பகுதியில் புகுந்து தமிழர்களைக் கொன்று குவித்தும் அழிவு வேலைகளைச் செய்தும் வந்த சிங்கள இராணுவத்தின் முக்கிய தளபதிகள் ஒட்டு மொத்தமாக புலிகளால் அழிக்கப்பட்ட நிகழ்ச்சி சிங்கள அரசையும் மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் நாள் யாழ்ப்பாணப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் துணிவுடன் ஊடுருவி புலிகள் புதைத்து வைத்த நிலக்கண்ணிவெடியில் சிக்கி கீழ்க்கண்ட சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் ஏறிவந்த வாகனங்கள் வெடித்துச் சிதறின.
1. வடபிராந்திய ஆணைத் தளபதி மேஜர் ஜெனரல் தென்சில் கொப்பேகடுவ
2. வடபிராந்திய கடற்படைத் தளபதி கமோடர் மொகான் ஜயமகா
3. யாழ்பிராந்திய பிரிகேடியர் விசயவிமலரத்தின
4. லெப். கர்னல் ஆர்ய இரத்தின
5. லெப். கர்னல் பலிப்பான
6. லெப். கர்னல் ஸ்டீபன்
7. மேஜர் அல்வீஸ்
8. கடற்படைத் தளபதி லெப். லங்க திலக
9. கடற்படை லெப்டினன்ட் விசயபுர
10. படைவீரர் விக்கிரம ரத்தின
ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் சிதறி மாண்டனர்.
சிங்கள இராணுவம் புலிகளுடன் போர்தொடங்கிய பிறகு உயர் இராணுவ அதிகாரிகள் பலர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது இந்நிகழ்ச்சியிலேயே ஆகும்.
வைஸ் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ
சிங்கள முப்படைத் தளபதிகளில் ஒருவரும் கடற்படையின் தளபதியுமான வைஸ் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ பிரிட்டனில் சென்று பயிற்சி பெற்றவர். இந்தியக் கடற்படைத் தளபதிகளுடன் பேச்சுநடத்தி அவர்கள் உதவியுடன் சிங்களக் கடற்படையின் வலிமையைப் பெருக்கியவர். விடுதலைப் புலிகளுக்கு கடல்வழியாக வரும் ஆயுதங்களைத் தடுக்க இருநாட்டுக் கடற்படையின் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தவர். 16-11-1992ஆம் ஆண்டு காலை 8.30 மணிக்கு கிளான்சி பெர்னாண்டோ தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் ஒருவன் அவர் காரின்மீது மோதினான். கண்மூடித்திறப்பதற்குள் காரும் காருக்குள் இருந்த தளபதியும் உடல் வெடித்துச் சிதறினார்கள். கொழும்பில் குண்டு தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கூட்டுப்படைத் தலைமையகம் அறிவித்து 4 நாட்களுக்குள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு தொடர்ந்து புலிகளை வேட்டையாடப் புறப்பட்ட பல தளபதிகள் புகையோடு புகையாக மறைந்து போனார்கள் என்பதைத்தான் கடந்தகால வரலாறு எடுத்துக்காட்டுகிறது. புலிகளின் வலிமையை அழித்துவிட்டதாக மார்தட்டும் லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இரண்டாண்டுகளுக்கு முன் புலிகளின் தாக்குதலிலிருந்து படுகாயங்களுடன் தப்பிப்பிழைத்தவர். பலமாதங்கள் மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக கிடந்தவர். ஆனால் இப்போது வாய்ச்சவடால் பேசுகிறார்.
சிங்கள அரசு போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டு வெளியேறிய போதும் இதுவரை போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக விடுதலைப் புலிகள் அறிவிக்கவில்லை. எனவே சிங்கள இராணுவத்தினர் மீது மரபுவழியிலான தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவும் இல்லை. உலக நாடுகளுக்கு இந்த உண்மை நன்கு தெரியும்.
2006ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து சிங்கள இராணுவம் புலிகளுக்கு எதிரான போரைத் தொடங்கியபோது அதற்கு எதிராக வழிமறிப்புத் தாக்குதல்களையும் தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளையுமே புலிகள் மேற்கொண்டு வருகிறார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதல் சிறப்பு அணிகள் எவையும் இன்னும் களம் இறங்கவில்லை. முன்னணி காவல் அரங்குகளில் உள்ள விடுதலைப்புலிகளே ஊடுருவமுயலும் சிங்கள இராணுவத்தினர்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை முறியடித்து விரட்டி வருகிறார்கள். இந்த உண்மையை அடியோடு மறைத்துவிட்டு விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது எனவும் தனது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் புலிகள் தங்கள் வலிமையை இழந்துவிட்டார்கள் என்றும் சரத்பொன்சேகா பீற்றிக்கொள்வது நகைப்புக்குரியதாகும்.
தரை, வான், கடல் ஆகிய மும்முனைகளிலும் புலிகளின் படைகள் வலிமையாக இருந்துவருகின்றன. போர் நிறுத்தகாலத்தில் பல புதிய அணிகளை புலிகள் உருவாக்கி உள்ளனர். தொடர்ந்தும் பல அணிகள் உருவாக்கப்பட்டும் வருகின்றன. முன்பு இருந்ததை விட தற்போது வலிமைமிக்க மரபு வழி இராணுவமாக புலிகள் உருவெடுத்துள்ளனர். அவர்கள் தமது முழு வலிமையுடன் இன்னும் களம் இறங்கவில்லை. தங்கள் மண்ணில் நுழைய முயலும் எதிரிகளை விரட்டியடிக்கும் வேலையை மட்டுமே செய்துவருகிறார்கள்.
இறுதிக்கட்டப் போருக்கு விடுதலைப்புலிகள் தயாராகி வருகிறார்கள் என்ற உண்மையை சிங்கள அரசும் இராணுவமும் நன்கு அறியும். எனவேதான் இந்தியாவின் உதவியை நாடி தில்லி நோக்கி சிங்கள அதிபர் இராசபக்சே அடிக்கடி காவடி எடுக்கிறார். சிங்கள இராணுவம் சந்திக்கவிருக்கிற பெரும் தோல்வியை மறைப்பதற்கான முன்முயற்சியாகவே பொன். சேகா போன்றவர்கள் பொய்யான பரப்பரைகளைக் கூறிவருகிறார்கள். அப்பாவி சிங்கள மக்கள் வேண்டுமானால் ஏமாறக்கூடுமே தவிர, தமிழர்களும் உலகநாடுகளும் இக்கூற்றுகளைக் கண்டு ஏமாறப்போவதில்லை.

No comments:

Post a Comment